×

பதவி உயர்வில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்க அரசுகளுக்கு உத்தரவிட முடியாது: உச்ச நீதிமன்றம் மீண்டும் உத்தரவு

புதுடெல்லி: அரசு பதவி உயர்வில் எஸ்சி, எஸ்டி. பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு உத்தரவிட முடியாது என உச்ச நீதிமன்றம், மீண்டும் திட்டவட்டமாக உத்தரவிட்டுள்ளது. அரசு பணி பதவி உயர்வில் எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு போதிய இடஒதுக்கீடு வழங்கும் சட்ட திருத்த மசோதா கடந்த 2012ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் கடும் சலசலப்புக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த அப்போதைய தலைமை நீதிபதி தீபக்மிஸ்ரா அமர்விலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, ‘‘இந்த விவகாரத்தில் 2006ம் ஆண்டு வழங்கிய நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவு தொடரும். மேலும் சாதி ரீதியான இடஒதுக்கீட்டை பின்பற்ற வேண்டிய அவசியமில்லை’’ என கூறி கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் 26ம் தேதி தீர்ப்பளித்தது.

இதை எதிர்த்து பல்வேறு மாநிலங்கள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தற்போதையை தலைமை நீதிபதி அமர்வில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தின் பொதுப்பணித்துறையில் உள்ள உதவி பொறியாளர் பதவி உயர்வில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு என இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக அப்பிரிவை சார்ந்தவர்கள் தரப்பில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதி நாகேஷ்வரராவ் மற்றும் ஹேமந்த் குப்தா ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கில் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘‘அரசு பணிகளில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கக்கோரி மாநில அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது. இதில் எந்த அடிப்படை உரிமையும் கிடையாது. மேலும் இடஒதுக்கீடு வழங்கலாமா, வேண்டாமா என்பது அரசின் முழுமையான விருப்பத்திற்கு உட்பட்டதாகும்.

இதனை நீதிமன்றம் கட்டாயப்படுத்த முடியாது. இதில் இடஒதுக்கீடு வழங்குவதற்கான சட்ட விதி 16ன் கீழ் மாநில அரசு தாமாகவே அனைத்து முடிவையும் எடுக்கலாம்’’ என்று கூறப்பட்டுள்ளது. அரசு பணி பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவிற்கு தடைக்கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை கடந்த 3ம் தேதி உச்ச நீதிமன்றத்தின் அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு விசாரிக்க மறுத்துவிட்டது.

Tags : Supreme Court ,Government ,promotion ,SC ,SD , Reservation, Government, Supreme Court
× RELATED தேர்தல் பத்திரம் விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல்