×

ஆயிரம் மூலிகைகள், மருந்து சரக்குகளுடன் வாழ கற்றுத்தரும் நிரல்யம்

இந்திய வரலாற்று கூற்று படி ஆரியர்கள் வருவதற்கு முன்பே திராவிடர்கள் இந்தியாவில் இருந்தார்கள். நாகரிகம் வளருமுன்பே தமிழின் அடையாளமாக  விளங்கிய சித்தர்கள் மனிதகுலத்திற்கு தேவையான அடிப்படை மருத்துவத்தை நன்கு கற்றறிருந்தனர். சித்த முறைகள் தெற்கேயும், ஆயுர்வேதம் வடக்கேயும் வளர்ச்சி பெற்றது. இந்த மருத்துவ முறைகளுக்கு தனி மனிதனின் பெயரை சூட்டாமல், மனித குலத்தை தோற்றுவித்தவரின் பெயரையே வைத்தனர். பாரம்பரிய கூற்றுகளின் படி சித்த முறைகள் முதற்கடவுளான சிவனிடம் இருந்து பார்வதிக்கும், பின்பு நந்தி தேவருக்கும், பின்பு சித்தர்களுக்கும் கைமாறியது. ஆதி காலத்தில் சித்தர்கள் பெரும் அறிவியல் ஆராய்ச்சியாளர்களாக திகழ்ந்தார்கள். பாரம்பரிய வழிமுறைபடி, சித்த மருத்துவ முறையானது அகத்தியர் என்னும் சித்தரின் வழி தோன்றலே ஆகும். இன்றும் பல புத்தகங்களில் அகத்தியரின் மருத்துவ முறைகள் காணப்படுகிறது. நூறாண்டு காலம் வாழ்க, நோய் நொடியில்லாமல் வளர்க என்ற வாழ்த்து பலிக்க சித்தர்கள் கற்றுத்தந்த வாழ்க்கை நெறிமுறைகளை பின்பற்றினால் போதும் என்கின்றனர் சித்த மருத்துவ வல்லுனர்கள். இதில் உள், வெளிபயன்பாட்டு மருந்து பொருட்கள் அனைத்தும் இயற்கையான முறையில் இயற்கையான சூழலில் தயாரிக்கப்படுகிறது. சித்தமருத்துவர்களின் அறிவுரைகளின்படி முறையாக பயன்படுத்தினால் போதுமானது.

சித்த மருத்துவத்தின் மூலமாக போற்றப்படும் அகத்தியர் வாழ்ந்த நெல்லை மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் பாளையங்கோட்டையில் சித்த மருத்துவக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. டெங்கு பரவ ஆரம்பித்த போதிலிருந்து சித்த மருத்துவத்தின் மீதான நம்பிக்கை மக்கள் மத்தியில் மட்டுமின்றி அலோபதி மருத்துவர்கள் மத்தியிலும் அதிகரித்துள்ளது. சித்த மருத்துவம் என்றாலே ஏதோ சில மூலிகைகளை அரைத்து சாப்பிடுகின்ற மருத்துவம் என ஒரு உருவகம் உண்டாகியுள்ளது. இது முற்றிலும் தவறு. சித்த மருந்துகளில் மூலிகைகள் மட்டுமல்லாது, உலோகங்கள்(Metals), உபரசங்கள், தாதுஉப்புக்கள், நவமணிகள்(Nine gems), பஞ்சசூதப் பாசாணங்கள், மற்றும் உயிரினங்களிலிருந்து எடுக்கப்படும் மருந்துச் சரக்குகள் போன்றவைகள் பயன்படுத்தப்படுகின்றன.

மேலும் 120 வகையான உபரசங்கள் (Secondary Minarals) சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு சரக்கிற்கும் பல்வேறு சுத்தி முறைகளை சித்த மருத்துவ முன்னோடிகள் கூறிச்சென்றுள்ளனர். உதாரணத்திற்கு பிரபல நூடுல்சி–்ல அதிகம் இருப்பதாக குற்றம் சாட்டப்படும் Lead என்ற காரீயத்தின் சுத்தி முறையை மட்டும் பார்ப்போம். ஐவேலிச் சமூலச்சாறு, அதாவது Diplocyclos Palmatus என்ற தாவரத்தின் சாற்றினை பயன்படுத்தி காரீயத்தை சுத்தி கொள்ளலாம். நொச்சி சாற்றினைப் பயன்படுத்தியும் சுத்தி செய்யலாம். வெள்ளாட்டின் சிறுநீர் மற்றும் பிரண்டையை பயன்படுத்தியும் சுத்தி செய்யலாம். இப்படியெல்லாம் பல வேதிமுறைகளை கடந்துதான் சித்த மருந்துகள் உருவாகின்றன.
இவை மட்டுமல்லாது உயிரினங்களிலிருந்தும் மருந்துச் சரக்குகளை பயன்படுத்துகிறது சித்த மருத்துவம். உதாரணமாக ஆமை ஓடு, கிளிஞ்சல், கஸ்தூரி, கடல்வாழ் உயிரினங்கள், உயிரினங்களின் பித்த நீர், பறவைகளின் இறகுகள், முட்டைகள், அவைகளின் ஓடுகள், இரத்தம் போன்றவற்றையும் மருந்தாகப் பயன்படுத்தப்படுகின்றன. சார் நான் சைவம்..... இதெல்லாம் கலந்த மருந்தை நான் சாப்பிடலாமா என்று யோசிக்கிறீர்களா..... இவற்றை மருந்தாக்கும் கலையை சித்தர்கள் அவ்வளவு அற்புதமாக சொல்லிச் சென்றுள்ளனர். அதனால் இவை அசைவ உணவல்ல.... சுத்தமான மருந்துகள்தான்.
நிரல்யம் கண்காட்சியில் இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களின் பங்களிப்பு மிக சிறப்பாக உள்ளது. சித்த மருத்துவ மாண்புகள் குறி த்து மாணவர்கள் கோல்டா, சேமாஸ்ரீ , ஸ்ரீஅனிரூத், தீபிகா, ஹர்ஷவர்த்திணி, நிவேதிதா, மலர்விழி பாபு, ஷக்தி பிரியா, வைத்தீஸ்வரி, ஐஸ்வர்யா உள்ளிட்டவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கூறியதாவது:

சித்த மருத்துவத்திற்கான அனைத்து மூல மருந்துபொருட்களும் இயற்கையான கிடைக்கும் செடி, கொடி, மரம் போன்றவைகளில் இருந்து நேரடியாக சேகரிக்கப்படுகிறது. இவை ஒவ்வொன்றின் குணம் அறிந்து அதற்கு ஏற்ப தகுதியான அளவில் கலவை செய்து மருந்தாக தயாரிக்கின்றனர்.
மரம் செடி கொடிகள் மட்டுமின்றி விலங்கினங்களிலும் மனிதர்களின் நோய் தீர்க்கும் மருந்துகள் அதிகம் உள்ளன. பாம்பு சட்டை, பூனை புழுக்கை, ஆமை ஓடு இப்படி இதன் பட்டியல் மிகப் பெரியது. இவற்றையும் பயன்படுத்தும் முறை மற்றும் அளவுகள் அனுபவம் மிக்க படித்த சித்த மருத்துவர்களால் தெரிவிக்கப்படுகிறது. சித்த மருத்துவ பொருட்கள் லேகியம், தைலம், கசாயம், சூரணம், வௌிபூச்சு குழம்பி, வெளிபூச்சு எண்ணெய், ஆவிபிடிக்கும் முறை என பல்வேறு வடிவங்களில் மிகவும் சுத்தமான முறையில் அதற்கென வடிவமைக்கப்பட்ட மண், செப்பு, இரும்பு உள்ளிட்ட பாத்திரங்களை கொண்டு தயாரிக்கின்றனர். தயாரித்த மருந்து பொருட்களை சிரட்டை குடுவை, முற்றிய இளநீர் குடுவை, சுரைக்காய் குடுவை போன்றவைகளில் அடைத்து வைக்கப்படுகிறது. சில மருந்து பொருட்கள் 100 ஆண்டு முதல் 500 ஆண்டுகள் வரை கெடாமல் இருக்கும் சக்தி படைத்தது. அதிக நச்சுத்தன்மை வாய்ந்த துத்தநாகம், மெர்குரி போன்றவைகளில் இருந்தும் வேறுபல மூலிகைகைள சேர்த்து நோய் தீர்க்கும் மருந்துகள் தயாரிக்கும் முறையும் உள்ளது.  மனிதர்களுக்கு மட்டுமல்ல யானை, கிளி, நாய் ஆகியவைகளும் மனிதர்களுக்கு இணையாக 6 அறிவு படைத்தவை என தொல்காப்பியத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மனிதர்களை போல் குழந்தையை பாசமாக வளர்ப்பதில் யானை 6ம் அறிவை பெற்றிருக்கிறது. குழந்தைக்கு பேச கற்றுக் கொடுப்பதுபோல் கிளிக்கும் கற்றுக் ெகாடுத்தால் மனிதர்களை போல் பேசும் ஆற்றல் உள்ளது. மனிதர்களின் எல்லா குணங்களையும் 6ம் அறிவின் மூலம் நாய் பெற்றிருக்கிறது.

நாம் பயன்படுத்தும் பாத்திரங்களிலும் மருத்துவ குணம் உள்ளது. செம்பு பாத்திரம் ரத்தம் பித்தத்தை நீக்கும். உடல் நலம், கண்ணொளி உண்டாக்கும். தங்க பாத்திரம் தாது விருத்தி, பசி, பலம் உண்டாக்கும். பித்தம் சோர்வு நீக்கும். வெள்ளி பாத்திரம் அழகு, மகிழ்ச்சியை உண்டாக்கும். மண் பாத்திரம் உணவில் அமிலத்தை குறைக்கும். ஊட்டசத்து கிடைக்கும்.  வெண்கலம் பாத்திரம் சோர்வு, ரத்தபித்தம் நீக்கும், மரப்பாத்திரம் முடக்குவாதம் நீக்கும், நோய் எதிர்ப்பு சக்தி உண்டாக்கும். பச்சிளம் குழந்தைகளை நோய் அண்டாமல் வளர்க்க குழந்தை பெட்டக பயன்பாட்டு முறை உள்ளது. அதில் வெள்ளெருக்கு அரைஞான் கயிறு, கரிசாலை செடி இலையால் தயாரிக்கப்பட்ட கரிசாலை மை, வசம்பு மிளகு சேர்த்த வளையல் இடம் பெற்றருக்கின்றன. இதில் இடம் பெற்றுள்ள பச்சரிசி, கடலைபருப்பு, துவரம் பருப்பு, உளுந்து, பாசி பயிறு ஆகியவற்றை சேர்த்து துணியில் கிழிகட்டி கொதிக்கும் நீரில் அதனை போட்டு தயாரிக்கும் கஞ்சியில் குறிப்பிட்ட ஸ்பூன் அளவு தயாரிக்கப்படும் கஞ்சி அதிக சக்திவாய்ந்ததாகும். சித்த மருத்துவ முறையில் தாய்ப்பால் குடிக்க முடியாத பசிளம் குழந்தைகளுக்கு என கடல் சங்கு பிரத்யேகமாக செதுக்கி தயாரித்து பயன்படுத்தப்படுகிறது. தேங்காய் பால் மூலம் தயாரிக்கப்படும் பேபி ஆயில் சித்த மருத்துவத்தில் உள்ளது. ஒலி எழுப்புவதற்காக வெண்கடுகு உள்ளே போட்டு பனை ஓலையால் தயாரிக்கப்பட்ட கிலுக்கை, தாழம்பாய் படுக்கை போன்றவை ஆரோக்கிய குழந்தை வளர்பிற்கு ஏற்றதாக சித்த மருத்துவம் சொல்கிறது.

தற்போது பல பெயர்களில் வரும் வைரஸ் தாக்குதல் நோய்கள் எல்லாவற்றிற்கும் மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாததே முக்கிய காரணமாக உள்ளது. எனவே சித்த மருத்துவ மகத்துவப்படி வாழ்க்கை நெறிமுறைகளை மேற்கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தியுடன் சித்தர்கள் கூறியதுபோல் நோயின்றி பல்லாண்டு வாழலாம். சித்த மருத்துவத்தில் இல்லாத சங்கதிகளே இல்லை. திருக்குறள் போல் இதுவும் உலகப்புகழ் பெறவும் தமிழ் மருத்துவம் மேலும் மேன்மையடையவும் செய்வது காலத்தின் கட்டாயமாகும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

யார் எவ்வளவு சாப்பிடணும்?

யார் எவ்வளவு உண்ணவேண்டும், எத்தனை வேளை எவ்வளவு நேர இடைவெளியில் உண்ண வேண்டும் என்பதற்கும் சித்த மருத்துவத்தில் அட்டவணை தந்துள்ளனர் நமது சித்தர்கள். ஒரு பொழுது உண்பவன் யோகி அதாவது குறைந்த பணி செய்பவர். இவர் 2 ஆயிரம் முதல் 2500 கலோரி உணவை ஒரு நாள் எடுத்துக் கொள்ளலாம். 2 பொழுது உண்பவன் போகி - கடின உழைப்பாளி. இந்த வகையைச் சேர்ந்தவர்கள் 2900 முதல் 3500 கலோரி உணவை எடுக்கலாம். 3 பொழுது உண்பவன் ரோகி அதாவது மிக கடின உழைப்பாளி ஆவார். இவர்கள் நாள் ஒன்றுக்கு 3500 முதல் 4 ஆயிரம் கலோரி உணவை உண்ணலாம்.

ஆறு அறிவு தெரியுமா?

6 அறிவு எவை என்பதையும் தொல்காப்பியம் தெளிவாக விளக்கியுள்ளது. ஓரறிவு தொடுதலால் உணர்வது, இரண்டறிவு தொடுதல் மற்றும் சுவைத்தலால் அறிவது. 3ம் அறிவு தொடுதல், சுவைத்தல், முகர்தல் அறிவது ஆகும், 4ம் அறிவு தொடுதல், சுவைத்தல், முகர்தல், பார்த்தல் இவற்றால் அறிவது. 5ம் அறிவு தொடுதல், சுவைத்தல், பார்த்தல், முகர்தல், கேட்டல் இவற்றால் அறிவது, 6ம் அறிவு என்பது தொடுதல், சுவைத்தல், முகர்தல், பார்த்தல், கேட்டல், மனத்தால் சிந்தித்து அறிவதாகும்.

Tags : program that teaches, thousands of herbs ,medicines to live with
× RELATED பிரபல நிறுவனங்கள் தயாரிக்கும்...