சென்னை: பத்திரப்பதிவுக்கு வரும் வயதான பெற்றோரிடம் தான செட்டில்மெண்ட் நிபந்தனை குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று பதிவுத்துறை ஐஜி சார்பதிவாளர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். தமிழகத்தில் 575 சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. இங்கு செட்டில்மென்ட் பத்திரம், விற்பனை பத்திரம் உள்ளிட்ட பலவகையான பத்திரங்கள் பதிவு செய்யப்படுகிறது. இதில், தான செட்டில்மென்ட் பத்திரம் என்பது சொத்தை தன் வாரிசுகளுக்கு எழுதி கொடுக்கும் குடும்ப ஏற்பாடு பத்திரங்கள் ஆகும். இவ்வாறு தானமாக சொத்துக்களை சார்பதிவாளர் அலுவலகங்களில் பத்திரமாக பதிவு செய்து வாங்கிய பிறகு தானம் வாங்கிய வாரிசுகள் அல்லது ரத்த சொந்தங்கள் தந்தை, தாய், சகோதரி, வாரிசு இல்லாதவர்களை விரட்டி விடுகின்றனர். இதனால் வயதானோர் கடைசி காலங்களில் என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
அதே ேநரத்தில் தான செட்டில்மென்ட் பத்திரத்தை பதிவு செய்யும் போது நிபந்தனையுடன் பத்திரப்பதிவு நடந்தால் தானம் கொடுத்தவரை கவனிக்க மறுக்கும் பட்சத்தில் அந்த பத்திரத்தை ரத்து செய்ய முடியும். ஆனால், பத்திரப்பதிவுக்கு வரும் முதியோர்களுக்கு போதிய அளவில் விழிப்புணர்வு இல்லாததால் இது தொடர்பாக அவர்களுக்கு தெரிவதில்லை. இதனால், அவர்கள் பத்திரத்தில் கையெழுத்து மட்டும் போட்டு விட்டு, நிபந்தனையுடன் பத்திரம் பதிவு செய்யாமல் விட்டு விடுகின்றனர். இதனால், தாய், தந்தையினர் தங்களது மகன் சொத்தை எழுதி வாங்கி விட்டு கவனிக்காமல் விட்டு விடுவதாக பதிவுத்துறை ஐஜி அலுவலகத்துக்கு ஏராளமான புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.
இந்த நிலையில், பதிவுத்துறை ஐஜி ஜோதி நிர்மலாசாமி, சார்பதிவாளர்களுக்கு பத்திரபதிவுக்கு வரும் வயதான முதியோரிடம் தானம் செட்டில்மென்ட் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும். அதே போன்று தான செட்டில்மென்ட்டில் நிபந்தனையுடன் பத்திரம் பதிவு செய்ய வேண்டும். அப்படி பத்திரப்பதிவு செய்யும் பட்சத்தில் பிள்ளைகள் கவனிக்காமல் விட்டாலும் அந்த பதிவை ரத்து செய்ய முடியும். எனவே, சார்பதிவாளர்கள் தங்களது அலுவலகத்துக்கு வரும் வயதானோரிடம் முகம் கொடுத்து முதலில் பேச வேண்டும்’ என்று அவர்களுக்கு ஐஜி அறிவுரை வழங்கியுள்ளார்.