×

காவல்துறைக்கு வாக்கி-டாக்கி வாங்கியதில் 88 கோடி முறைகேடு போலீஸ் அதிகாரிகள் வீடுகளில் ரெய்டு

* 15 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி
* முக்கிய ஆவணங்கள் சிக்கின

சென்னை: தமிழக காவல் துறைக்கு வாக்கி டாக்கி வாங்கியதில் ₹88 கோடி முறைகேடு நடைபெற்றது தொடர்பாக 3 உயர் போலீஸ் அதிகாரிகளின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். 15க்கும் மேற்பட்ட இடங்களில் நடந்த இந்த சோதனையில் போலீஸ் அதிகாரிகளின் முறைகேடுகள் குறித்த முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. இந்த முறைகேடுகளில் மேலும் பல அதிகாரிகளுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகமும் அதிகாரிகளுக்கு எழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக காவல் துறையை நவீனமாக்கும் திட்டத்தின்படி 2017-18-ம் ஆண்டில் 47 கோடி ரூபாயை தமிழக அரசு ஒதுக்கீடு செய்தது. இந்த நிதியின் கீழ் 2017ம் ஆண்டு காவல் துறைக்கு நவீன வாக்கி டாக்கி வாங்க முடிவு செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து நவீன கருவிகள் வாங்குவதற்கான பணிகளை தமிழக காவல் துறையின் தொழில்நுட்ப பிரிவு மேற்கொண்டுவந்தது. புதிய கருவிகளை வாங்க பல்வேறு நிறுவனங்களுக்கு டெண்டர் கோரிய நிலையில், டெண்டர் நடைமுறையில் ஊழல் நடந்திருப்பதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்திய அப்போதைய உள்துறைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி, அப்போதைய டிஜிபி டி.கே.ராஜேந்திரனுக்கு கடிதம் எழுதினார்.

அதில் “தமிழகக் காவல் துறைக்கு வாக்கி டாக்கி வாங்க விடப்பட்ட டெண்டரில் பல்வேறு விதிமீறல்கள் இருக்கின்றன. வாக்கி - டாக்கிக்கு 28 சதவீதமாக இருந்த வரி, ஜிஎஸ்டி சட்டம் அமலான பிறகு 12 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டாலும், குறிப்பிட்ட ஒரு கம்பெனிக்கு 28 சதவீதமாகவே கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதால் அரசுக்கு இழப்பு ஏற்பட்டிருக்கிறது. 2017-18ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் காவல் துறையை நவீனமயமாக்க 47 கோடி நிதிதான் ஒதுக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளபோது, 88 கோடிக்கு எப்படி டெண்டர் விட்டப்பட்டது. ₹ 88 கோடி டெண்டரில் ஒரேயொரு நிறுவனம் மட்டும் கலந்துகொண்ட நிலையில் மறு டெண்டர் விடாமல் அந்த ஒரே நிறுவனத்துக்கு எப்படி ஒப்பந்தம் கொடுக்கப்பட்டது என்று பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தார். இந்த முறைகேட்டில் தமிழக காவல் துறையின் தொழில்நுட்ப பிரிவில் பணியாற்றிய முக்கிய அதிகாரி உள்பட ஓய்வு பெற்ற காவல் அதிகாரிகளுக்கும், தற்போது பதவியில் இருக்கும் உயர் காவல் அதிகாரிகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று கூறப்பட்டது. இது தொடர்பாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், வாக்கி டாக்கி முறைகேடு தொடர்பாக டிஜிபி மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறை விசாரணை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டது.

இந்தநிலையில், தொழில்நுட்ப பிரிவில் பணியாற்றிய உயர் அதிகாரிகளிடம் லஞ்ச ஒழிப்பு துறை விசாரணை நடத்தியது. குறிப்பாக இந்த முறைகேடு நடத்த நேரத்தில் தொழில்நுட்பபிரிவு எஸ்பியாக இருந்த அன்புச் செழியன் உள்ளிட்ட காவல் துறை உயர் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதைப் போன்று காவல்துறையில் தொழில்நுட்ப துறையின் ஒப்பந்தாரர்கள் சிலரிடமும் லஞ்ச ஒழிப்புதுறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் இந்த முறைகேடு தொடர்பாக தொழில்நுட்ப பிரிவு உயர் அதிகாரிகளின் வீட்டில் தமிழக லஞ்ச ஒழிப்பு துறையினர் நேற்று காலை சோதனை நடத்தினர். கீழ்ப்பாக்கம் பால்பர் சாலையில் உள்ள எஸ்பி அன்புச் செழியன் வீடு, பட்டினப்பாக்கம் மக்கள் தொடர்பு அலுவலர்கள் குடியிருப்பில் உள்ள ஏடிஎஸ்பி ரமேஷ், டிஎஸ்பி உதயசங்கர் வீடுகளில் தமிழக லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்திவருகின்றனர். மேலும் சைதாப்பேட்டை மற்றும் அண்ணா நகர் உள்ளிட்ட 15 இடங்களில் சோதனை நடத்தப்பட்டன. இந்தச் சோதனையில் முறைகேடு தொடர்பாக பல்வேறு ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.  இதைதவிர்த்து காவல் துறைக்கு தொழில்நுட்ப கருவிகள் வாங்கியதில் 350 கோடி ஊழல் நடந்திருப்பது தொடர்பாகவும் லஞ்ச ஒழிப்பு துறை விசாரணை நடத்திவருவது குறிப்பிடத்தக்கது.

ஆல் இன் ஆல் அன்புசெழியன்

எஸ்பி அன்புச் செழியன் 2013ம் ஆண்டு முதல் தொழில்நுட்ப பிரிவில் பணியாற்றிவந்துள்ளார். வாக்கி, டாக்கி, டிஜிட்டல் மொபைல் ேரடியோ சிஸ்டம், சிசிடிவி உள்ளிட்ட தொழில்சாதனங்கள் வாங்குதல் தொடர்பான டெண்டர்களை இறுதி செய்யும் குழுவில் இடம் பெற்றிருந்தார். அதைத் தவிர, தமிழக காவல்துறைக்கு எந்த பிரிவுக்கு வேண்டுமானாலும் கருவிகள் வாங்க வேண்டும் என்றால், அன்புசெழியன்தான் டெண்டர் விதிமுறைகளை வகுத்துக் கொடுப்பார். உதாரணத்திற்கு தமிழக அரசு நன்றாக எழுதக் கூடிய ஒரு பேனா வாங்க வேண்டும் என்று கேட்டால், அதற்கு அவர் சிவப்பு கலரில், 6 இன்ச் பேனா வாங்க வேண்டும். அப்போதுதான் பேனா சிறப்பாக எழுதும் என்று அறிக்கை கொடுப்பாராம். ஏனெனில் அவருக்கு வேண்டிய நிறுவனங்கள் சிவப்பு கலரில் 6 இன்ச் பேனாவை தயாரிக்கும்.

மற்ற நிறுவனங்கள் வேறு கலரில், 6 இன்ச்சை விட சிறிதாகவோ அல்லது பெரிதாகவோ தயாரித்திருக்கும். இதனால் அன்புசெழியனுக்கு வேண்டிய நிறுவனம் மட்டுமே டெண்டரில் பங்கேற்கும் சூழ்நிலை உருவாகும். இந்த முறைகேட்டை சாதாரணமாக கண்டுபிடிக்க முடியாது. தற்போது டிஜிபியாக வந்துள்ள திரிபாதிதான் இந்த முறைகேட்டை கண்டுபிடித்து, லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளார். மேலும் கடந்த 6 மாதமாக அவரிடம் எந்த கருத்தும் கேட்கக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளார். இதனால், அவர் எஸ்பியாக பொறுப்பேற்ற பிறகு மாநிலம் முழுவதும் அவர் ஆலோசனைகளை கேட்டு, நடத்தப்பட்ட டெண்டர் குறித்து முழுமையாக விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை பாதிக்கப்பட்ட நிறுவனங்கள் எழுப்பியுள்ளன. லஞ்ச ஒழிப்புத்துறையும் இது குறித்து முழுமையாக ஆய்வு நடத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளன.

Tags : police officers ,policemen ,homes ,walkie-talkie raids , 88 crores, police officers ,raided homes
× RELATED கேரளாவின் திருச்சூர் பூரம் விழாவில்...