தென்தாமரைகுளம்: சாமிதோப்பு, கரும்பாட்டூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் தெரு நாய்களோடு வெறி நாய்களும் ரோடுகளில் சுற்றித்திரிந்து பொதுமக்களைத் தாக்குவதால் அவைகளை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சாமிதோப்பு ஊராட்சிக்கு உட்பட்ட காமராஜபுரம், சாஸ்தான் கோவில்விளை மற்றும் கரும்பாட்டூர் ஊராட்சிக்கு உட்பட்ட சோட்டப் பணிக்கன்தேரிவிளை, ஆண்டி விளை ஆகிய பகுதிகளில் தெருநாய்கள் மற்றும் வெறிநாய்கள் ரோடுகளில் சுற்றி திரிகிறது. அந்த ரோடுகளில் இருசக்கர வாகனங்களில் செல்வோர்களை இந்த நாய்கள் துரத்துகின்றன. இதனால் இரு சக்கர வாகனத்தில் செல்வோர் விபத்துக்குள்ளாகும் சூழ்நிலை ஏற்படுகிறது.
மேலும் அந்த ரோடுகளில் செல்லும் பாதசாரிகள் பள்ளிக்கு செல்லும் சிறுவர் சிறுமிகள் அவர்களையும் இந்த நாய்கள் துரத்துகின்றன இதனால் பொதுமக்கள் பெரும் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. சுமார் 10க்கும் மேற்பட்டவர்களை இந்த வழி நாய்கள் தாக்கியதில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். எனவே இந்த ரோடுகள் வழியாக சிறுவர் சிறுமிகளை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் தயக்கம் காட்டுகின்றனர். நாய்களின் உரிமையாளரிடம் தகவல் கோரியும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் இவைகள் தொடர்ந்து பொதுமக்களுக்கு தொல்லை கொடுத்துக் கொண்டிருக்கின்றன. சுமார் 10க்கும் மேற்பட்ட நபர்களை இந்த நாய்கள் கடித்து தாக்கியுள்ளன.
காமராஜபுரம் பகுதியிலுள்ள அளத்தங்கரை ரோட்டில் அதிகாலையில் நடைப்பயிற்சியில் ஈடுபடுவோர்களையும் இந்த நாய்கள் விட்டுவைப்பதில்லை இதனால் நடைப்பயிற்சி மேற்கொள்வோர் வேறு பாதைகளில் செல்லும் சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த தெருநாய்களோடு நோயால் பாதிக்கப்பட்ட நாய்களும் சுற்றித் திரிவதால் அப்பகுதியில் கொடிய நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. சாஸ்தான்கோவில் விளை பகுதியில் கடந்த சில மாதங்களாக ஏராளமான கோழிகள் மற்றும் ஆட்டுகுட்டியையும் நாய்கள் கடித்து குதறியுள்ன. இதனால் வீடுகளில் செல்லபிராணிகளை வளர்ப்போர் அனைவரும் கவலையுடன் இருக்கின்றனர். இதனால் அரசு அதிகாரிகள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு இப்பகுதியில் சுற்றித் திரியும் நாய்களையும் நோயால் பாதிக்கப்பட்ட நாய்களையும் உடனடியாக அங்கிருந்து அகற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.