அரியலூர்: அரியலூர் மாவட்டம் சிறுவளூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஒரு மணி நேரம் தலைமை ஆசிரியராக ஒன்பதாம் வகுப்பு மாணவி சங்கீதாவிற்கு தலைமையாசிரியர் சின்னதுரை பொறுப்பு வழங்கினார். இந்த ஒருமணி நேரத்தில் பள்ளியில் நடைபெறும் செயல்பாடுகள், வருகைப்பதிவு விபரம், வகுப்பறையில் மாணவர்களின் செயல்திறன், பிற வகுப்புகள், மைதானம், வளாகத்தை பார்வையிட்டார். இந்நிகழ்வு மாணவர்களிடையே தலைமை பண்பு, விட்டுக்கொடுக்கும் மணப்பாண்மை, நிர்வாகத்திறன் போன்றவற்றில் மாணவர்களை ஊக்குவிக்கும் நிகழ்வாக அமைந்தது. விளையாட்டு பாட வேளையில் மாணவ-மாணவிகளுக்கு விருப்பமான விளையாட்டை தேர்வு செய்து அந்த விளையாட்டில் உடற்கல்வி ஆசிரியர் வழிகாட்டுதலின்படி திறைமையை வளர்த்து கொள்ள வேண்டும் என மாணவி கூறினார்.
மேலும், இந்த ஒரு மணிநேரம் தலைமையாசிரியர் இருக்கையில் அமர்ந்து நிர்வகித்த தருணம் மிக மகிழ்ச்சியாக உள்ளது. இதேபோல் நான் படித்து தலைமையாசிரியராக மாறுவதற்கு கடினமாக உழைப்பேன் என்றும், ஆசிரியர் பணியினை தேர்வு செய்து ஏழைஎளிய மாணவிகளின் கல்வியை மேம்படுத்த பாடுபடுவேன் என தெரிவித்தார். இதுகுறித்து தலைமையாசிரியர் சின்னதுரை கூறுகையில், மாணவ-மாணவிகளிடம் தலைமை பண்பை வளர்க்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் ஒரு வகுப்பில் நன்றாக படிக்கும் மாணவ-மாணவி ஒரு மணி நேரம் தலைமை ஆசிரியர் பதவி வழங்கபடும் இதனால் அவர்களுக்கு ஊக்கம் ஏற்பட்டு நன்றாக படிக்க இந்நிகழ்வு அமையும் என தெரிவித்தார். ஒருமணி நேர தலைமையாசிரியராக இருந்த மாணவிக்கு சக ஆசிரியர்கள் வாழ்த்துகளை தெரவித்தனர்.