×

இரட்டை ரயில் பாதை திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்தும் பணி மந்தம்

நாகர்கோவில்:  கன்னியாகுமரி - திருவனந்தபுரம், நாகர்கோவில் - மதுரை இடையே இரட்டை ரயில் பாதை திட்டத்துக்கு பட்ஜெட்டில், ₹844 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2022க்குள் இங்கு பணிகள் முடிந்து போக்குவரத்து தொடங்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழ்நாட்டில் மொத்தம் 4027.08 கி.மீ தூரத்துக்கு ரயில்வே இருப்புபாதை வழித்தடங்கள் உள்ளன. நாட்டின் தென்கோடி பகுதியான கன்னியாகுமரியிலிருந்து தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை செல்லும் வழித்தடம் மிக முக்கியமான ரயில் வழி தடம் ஆகும். இந்த வழி தடம் கன்னியாகுமரியில் இருந்து தொடங்கி நாகர்கோவில், திருநெல்வேலி, வாஞ்சிமணியாச்சி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக சென்னை எழும்பூரை சென்றடைகிறது. இந்த வழி தடம் வழியாக தென் தமிழ்நாட்டிலிருந்து இயங்கும் அனைத்து ரயில்களும் இயக்கப்படுகின்றன.
தற்போது சென்னை முதல் மதுரை வரை உள்ள 490 கி.மீ. பாதை இரு வழி பாதையாக உள்ளது. இதே போல் திருச்சி முதல் தஞ்சாவூர் வரை 50 கி.மீ பாதை இரு வழிபாதையாக இருக்கிறது. கன்னியாகுமரி முதல் மதுரை வரை உள்ள ரயில் பாதையை இரு வழி பாதையாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, கடந்த 2015-ம் ஆண்டு பட்ஜெட்டில் அனுமதி அளிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

கன்னியாகுமரியில் இருந்து திருவனந்தபுரம் வரை உள்ள 85 கி.மீ பாதையை இரு வழிபாதையாக மாற்ற ₹900 கோடி என திட்டமிடப்பட்டு பணிகள் தொடங்கின. இந்த திட்டத்துக்கு இந்த ஆண்டு பட்ஜெட்டில் 132 கோடியே 50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை தெற்கு ரயில்வேயின் கீழ் உள்ள கட்டுமான நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. தற்போது முன்னுரிமையாக கன்னியாகுமரி - நாகர்கோவில் - இரணியல் பகுதியில் பணிகள் நடைபெற்று வருகிறது. நிதி பற்றாக்குறை காரணமாக கடந்த 5 மாதங்கள் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. இந்த பட்ஜெட்டில் நிதி அறிவிக்கப்பட்டு உள்ளதால் மார்ச் மாதத்தில் மீண்டும் பணிகள் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வழித்தடத்தில் நில ஆர்ஜித பணிகள் முக்கியத்துவம் பெறுகின்றன. ரயில்வே துறையை பொறுத்தவரை நிலங்களுக்கான மதிப்பீடு தொகையை அளித்து விடுவார்கள். மாவட்ட நிர்வாகம் தான் வருவாய்த்துறை மூலம் நிலத்தை ஆர்ஜிதம் செய்து வழங்க வேண்டும். அந்த வகையில் நில ஆர்ஜித பணி மந்த கதியில் தான் உள்ளது. பல்வேறு இடங்களில் அளவீடு கூட வருவாய்த்துறை முடிக்க வில்லை. 2022க்குள் இந்த திட்டத்தை முடித்து ரயில் போக்குவரத்து தொடங்க வேண்டும். ஆனால் நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் இந்த திட்டம் 2022ம் ஆண்டுக்குள் முடிவடையுமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. இந்த வழித்தடத்தில், கன்னியாகுமரி -  நாகர்கோவில் பிரிவில் மட்டும் பணிகள் ஓரளவு சுமாராக நடக்கிறது.

இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த வழிபாதையில் ரயில் போக்குவரத்துக்கு வாய்ப்பு இருப்பதாக எதிர்ப்பார்க்கபடுகிறது. நாகர்கோவிலிருந்து மதுரை வரை உள்ள பாதையை இரு வழிபாதையாக மாற்ற மதுரை - மணியாச்சி - தூத்துக்குடி என 159 கி.மீ தூரம் ஒரு திட்டமாகவும், மணியாச்சி - திருநெல்வேலி - நாகர்கோவில் 102 கி.மீ தூரம் ஒரு திட்டமாகவும் செயல்படுத்தப்படுகிறது. இதில் மதுரை - மணியாச்சி - தூத்துக்குடி பாதை பணிகளின் திட்ட மதிப்பீடு ₹1,182.31 கோடி. நாகர்கோவில் - மணியாச்சி பாதை திட்ட மதிப்பீடு ₹1,003.94 கோடி ஆகும். இந்த திட்டங்களுக்கு இந்த பட்ஜெட்டில் நாகர்கோவில் - மணியாச்சி இருவ ழிபாதை பணிகளுக்காக ரூ. 345 கோடி, மதுரை  மணியாச்சி - தூத்துக்குடி திட்டத்துக்கு 367 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த திட்டத்தை ரயில்வே துறையின் கீழ் உள்ள பொதுத்துறை நிறுவனமான ஆர்.வி.என்.எல். நிறுவனம் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
ரயில்வே சார்ந்த  நிறுவனம் இங்கு பணிகளை மேற்கொண்டாலும் கூட, இவற்றுக்கு சில தளர்வுகளை ரயில்வே நிர்வாகம் அளித்துள்ளது. நிதி ஒதுக்கீடு பெற்றதும் டெண்டர் அறிவிப்பு உள்ளிட்ட நடைமுறைகள் தேவையில்லை. நேரடியாக நிதியை பயன்படுத்தி திட்டங்களை முடிக்கலாம் என்பதால், இவர்களுக்கு நிதி கிடைத்ததும் பணிகள் வேகமாக தொடங்கும். இருப்பினும் நிலம் கையகப்படுத்துதல் என்பது நெல்லை, தூத்துக்குடி மாவட் நிர்வாகத்தின் கையில் உள்ளது. நிலத்தை கையகப்படுத்தி கொடுத்தால் பணிகளை வேகமாக முடிக்க வாய்ப்பாக அமையும்.

Tags : Land acquisition slowdown , Budget, Transportation, Total, Allocation, Kanyakumari
× RELATED ஊட்டி தாவரவியல் பூங்காவில் நுழைவு கட்டணம் உயர்வு