×

சிவகங்கை மாவட்டத்தில் கடனை கட்டச் சொல்லி விவசாயிகளுக்கு நெருக்கடி கொடுக்கும் வங்கிகள்

சிவகங்கை:  சிவகங்கை மாவட்டத்தில் விவசாய கடன்களை கட்ட வலியுறுத்தி விவசாயிகளுக்கு வங்கி நிர்வாகங்கள் நெருக்கடி கொடுத்து வருகிறது. எனவே, அனைத்து விவசாயிகளுக்கும் வழங்கப்பட்ட நகை, பயிர்க்கடன் உள்ளிட்டவைகளை ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் 2014ல் ஓரளவு மழை பெய்த நிலையில் 2015ல் வடகிழக்கு பருவமழை காலத்தில் விவசாயத்திற்கான போதிய மழை பெய்யவில்லை. மழை இல்லாமல் சுமார் 70 சதவீத பயிர்களும், குலைநோய் தாக்குதலால் 20சதவீத பயிர்களும் பாதிக்கப்பட்டன. 2016ம் ஆண்டும் மழை இல்லாமல் வறட்சியால் நூறு சதவீத பாதிப்பு ஏற்பட்டது. கடந்த 2017ம் ஆண்டில் 72ஆயிரத்து 153 ஹெக்டேர் நெற்பயிர் சாகுபடி செய்த நிலையில் முழுமையாக அனைத்து பயிர்களும் கருகின. 2018ம் ஆண்டும் மாவட்டம் முழுவதும் நூறு சதவீதம் விளைச்சல் இல்லாமல் பயிர்கள் பாதிக்கப்பட்டன. 2018ம் ஆண்டிற்கான பாதிப்பு சதவீதத்தில் குளறுபடி நிலவுவதால் இழப்பீடு வழங்கலில் குளறுபடி ஏற்பட்டது.

கடந்த சில ஆண்டுகளாகவே போதிய மழை இல்லாமல் விவசாயம் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது. விவசாயிகள் கடந்த சில ஆண்டாக கூட்டுறவு வங்கி, கிராம வங்கி, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாய நகைக்கடன், பயிர்க்கடன் வாங்கினர். வாங்கிய கடனுக்கு வட்டி கூட செலுத்த முடியாத நிலையில் உள்ளனர். ஆனால், ஓராண்டு முடிந்தவுடன் வங்கிகளில் வைக்கப்பட்ட நகைக்கடனுக்கு நோட்டீஸ் அனுப்பி உடனடியாக நகைகளை திருப்ப வேண்டும் என வங்கி நிர்வாகங்கள் நெருக்கடி கொடுத்து வருகின்றனர். முன்பு ஓர் ஆண்டு தவணை முடிவடைந்து குறைந்தபட்சம ஆறு மாதம் அவகாசம் அளிக்கடும். ஆனால், தற்போது உடனடியாக நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், தொடர்ந்து சில ஆண்டுகளாக வறட்சியால் விவசாயத்திற்கு செலவிட்ட தொகை அனைத்தும் வீணானது. நீண்ட காலத்திற்கு பிறகு 2019ம் ஆண்டு தான் விளைச்சலுக்கான மழை பெய்துள்ளது. ஆனால் ஆண்டுதோறும் ஒரே மாதிரியான விவசாயம் இல்லாததால் பிழைப்பு தேடி பிற மாவட்டங்களுக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. விவசாயத்திற்காக வங்கியில் வாங்கிய கடனை செலுத்த முடியவில்லை. கிராம வங்கியில் விவசாய நகைக்கடனை ஒரு வருடத்தில் திரும்ப செலுத்தவில்லையெனில் ஓர் ஆண்டு முடிந்த அடுத்த மாதத்திலேயே நோட்டீஸ் அனுப்புகின்றனர். கிராம வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் தான் விவசாயிகளை அதிகமாக பாதிக்கச் செய்கின்றனர். விவசாய கடன்கள், விவசாய நகைக்கடன்களை செலுத்துவதில் கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும்’’ என்றனர்.

Tags : Banks ,Sivagangai district , Banking, Crisis, Debt, Demand, Farmers
× RELATED மாநில அளவிலான போட்டிக்கு கூடைப்பந்து வீரர்கள் இன்று தேர்வு