×

தமிழ் திரைப்படத்துறையை எதிரி போல பார்க்கும் நிலை உருவாகிவிட்டது: பெஃப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி பேட்டி

சென்னை: தமிழ் திரைப்படத்துறையை எதிரி போல பார்க்கும் நிலை உருவாகிவிட்டது என்று, பெஃப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி ஆதங்கம் தெரிவித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு நெய்வேலியில் நடைபெற்று வருகிறது. இதன் படப்பிடிப்பு தளத்தில் நேற்று மாலை பாஜக கட்சியினர் போராட்டம் நடத்தினர். இதனால் பரபரப்பு உண்டானது. அவர்களுக்கு எதிராக விஜய் ரசிகர்களும் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டம் செய்தார்கள். அவர்களைக் கலைக்க போலீஸார் சிறிதாக தடியடி நடத்தினார்கள். இந்தப் போராட்டம் தொடர்பாக பெஃப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், மாஸ்டர் படப்பிடிப்பு தளத்தில் பாஜக நடத்திய போராட்டத்தால் பெப்சி தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த மாதிரியான போராட்டத்தால் திரைப்படத் துறையில் பெரிய அளவில் பிரச்சினை வரவிருப்பதாகத் தெரிகிறது. இந்தப் போராட்டத்தை பெஃப்சி அமைப்பு கண்டிக்கிறது. இந்த மாதிரியான போராட்டங்களால், தமிழ்நாட்டுக்கு வெளியே படப்பிடிப்பைக் கொண்டு போய்விடுகிறார்கள். 25 ஆண்டுகளுக்கு முன்பு அரவிந்தன் படத்தின் படப்பிடிப்பில் ஒருவர் காயமடைந்தார், எப்போது வந்து தகராறு பண்ணுவது? இதில் என்ன நியாயம் இருக்கிறது. அரவிந்தன் படத்துக்குப் பிறகு 16 படத்தின் படப்பிடிப்பு அங்கு நடந்துள்ளது. அப்போது எல்லாம் பண்ணாதவர்கள் இப்போது பண்ணுவது ஏன்? பெரிய ஹீரோக்களில் விஜய் படம் மட்டும் தான் தமிழ்நாட்டில் நடக்கிறது. ரஜினி, அஜித் உள்ளிட்டோர் நமக்கு ஏன் பிரச்சினை என்று வெளிமாநிலத்துக்கு ஷுட்டிங்கை மாற்றி விடுகிறார்கள்.

இதனால் தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய 1000 கோடி ரூபாய் பணம் வெளியே போய்விடுகிறது. நெய்வேலியில் நடைபெற்றுள்ள இந்தப் போராட்டம் முறையல்ல. தமிழ் சினிமாவை அரசியல் காழ்ப்புணர்ச்சி பாதிக்கிறது. தமிழ் திரைப்படத்துறையை எதிரி போல பார்க்கும் நிலை உருவாகிவிட்டது. பிரசாத் ஸ்டூடியோவில் ரெக்கார்டிங் தியேட்டர் பாதுகாக்கப்பட வேண்டும். வயலின், கிட்டார் வாசிப்போர் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இசைக்கலைஞர்கள் பாதுகாக்கப்பட வேண்டும். என்று கூறியுள்ளார். மேலும் பேசிய அவர், தமிழ் சினிமா சிறிய பிரச்சனையில் இருந்து பெரிய பிரச்சனை நோக்கி செல்கிறது.

திரைப்படத்தின் லாபம், நஷ்டம் தயாரிப்பாளர், விநியோகஸ்தர் மட்டுமே சாரும். திரைப்பட இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் வீட்டில் சிலர் அத்துமீறி நடந்துள்ளனர். திரைப்படத்தில் லாப நஷ்டத்தில் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு தொடர்பில்லை. வரவுக்கும் செலவுக்கும் தொடர்பில்லாத தொழில்முறை உருவாகியுள்ளது. பொய் கணக்கு மூலம் திரைத்துறையை பெரிய துறையாக மாற்ற முயற்சி நடக்கிறது. கட்டுப்பாடு இல்லாத துறையாக திரைப்படத்துறை மாறிவிட்டது. எனவே, திரைப்படத்துறை மேம்பாட்டு நிறுவனத்தை தொடங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைக்கிறேன். டிக்கெட் விலையை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என கூறியுள்ளார்.


Tags : RK Selvamani ,PFSI ,Fefsi , Tamil Movie Department, fefsi, RK Selvamani
× RELATED அவதூறு வழக்கில் ஆஜராகாத இயக்குநர்...