×

வீட்டில் தனியாக இருந்த ராணுவ வீரர் மனைவி அடித்து படுகொலை: 15 சவரன் நகையுடன் ஆசாமிகள் ஓட்டம்

ஆவடி: ஆவடி அடுத்த கண்ணப்பாளையம், ஒத்தவாடை தெருவைச் சேர்ந்தவர் பார்த்தசாரதி. ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவர் கடந்த 2 ஆண்டுக்கு முன்பு இறந்துவிட்டார். இவரது மனைவி மல்லிகா (56). இவர், தனது கணவரின் ஓய்வூதிய பணத்தில் வாழ்க்கை நடத்தி வந்தார். இவர்களுக்கு குழந்தை இல்லை.  மல்லிகா வீட்டருகே அவரது தங்கை இந்திரா, அவரது மகள் மீனாட்சி, மருமகன் தங்கதுரை ஆகியோர் வசிக்கின்றனர். இவர்கள் தான் மல்லிகாவை அடிக்கடி சென்று கவனித்து வந்தனர். இந்நிலையில் நேற்று காலை இந்திரா, தனது மருமகன் தங்கதுரையுடன் கடைக்கு சென்றிருந்தார். மீனாட்சி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இவர்,  நேற்று மதியம் 12 மணியளவில் பெரியம்மா மல்லிகாவை பார்க்க அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, அங்குள்ள சமையலறையில் ரத்த வெள்ளத்தில் மல்லிகா சடலமாக கிடந்தார்.  அவரது தலையின் இடது பக்கம் பலத்த வெட்டு காயம் இருந்தது. மேலும், அவரது கழுத்து மற்றும் காதில் கிடந்த தங்கச்சங்கிலி, கம்மல் ஆகியவை மாயமாகி இருந்தது.

இதோடு மட்டுமல்லாமல், வீட்டு பீரோவில் இருந்த நகைகளும் திருடு போனது தெரிந்தது.  இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மீனாட்சி, தனது தாய் மற்றும் கணவருக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு அவர்கள் விரைந்து வந்து கதறி அழுதனர்.  தகவலறிந்து ஆவடி குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பிராவீன்டேனி தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு  அனுப்பிவைத்தனர்.  மேலும், சம்பவ இடத்தை சென்னை மேற்கு மண்டல இணை ஆணையர் விஜயகுமாரி, அம்பத்தூர் போலீஸ் துணை கமிஷனர் ஈஸ்வரன், ஆவடி போலீஸ் உதவி கமிஷனர் சத்தியமூர்த்தி ஆகியோர் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.  மோப்பநாய் ஜான்சி வரவழைக்கப்பட்டது. அந்த நாய் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் ஓடி ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் அருகில் படுத்துக் கொண்டது.   

புகாரின் அடிப்படையில் ஆவடி போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்தனர். டிஎஸ்பி பஞ்சாட்சரம் தலைமையிலான போலீசார், கைரேகை நிபுணர்களை வரவழைத்து குற்றவாளிகளின் கைரேகைகளை பதிவு செய்தனர். முதற்கட்ட விசாரணையில், வீட்டில் மல்லிகா தனியாக இருப்பதை நோட்டமிட்ட மர்ம நபர்கள், நள்ளிரவில் வீடு புகுந்து, மல்லிகாவை இரும்பு ராடால் அடித்து கொலை செய்துள்ளனர். அதன்பிறகு அவரது காது, கழுத்தில் கிடந்த நகைகள் மற்றும் வீட்டு பீரோவில் இருந்த நகைகள் உள்பட சுமார் 15 சவரன், பணத்தை கொள்ளை அடித்து சென்று உள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.  மல்லிகா காற்றோட்டத்துக்காக வீட்டு கதவை திறந்துவைத்து தான் தூங்குவாராம். இதனை சாதகமாக பயன்படுத்திய மர்ம நபர்கள் கொலை செய்து நகைகளை கொள்ளை அடித்து சென்றுள்ளனர். இதனை அடுத்து போலீசார் தனிப்படை அமைத்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா உதவியுடன் கொள்ளையர்களை தேடுகின்றனர்.


Tags : soldier ,home ,Asami , Soldier's wife, assassination, 15 shaving jewelry, azamis flow
× RELATED உள்துறை அமைச்சர் பதவியை நமச்சிவாயம்...