×

மகள்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் வளர்ப்பு மகனை கொன்ற தாய் கைது: கூலிப்படையினர் 3 பேரும் பிடிபட்டனர்

திருநின்றவூர்: மகள்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் வளர்ப்பு மகனை கூலிப்படை ஏவி கொன்ற தாயை போலீசார் கைது செய்தனர். கூலிப்படையைச் சேர்ந்த 3 பேரும் பிடிபட்டனர். திருநின்றவூர், வச்சலாபுரம், 3வது தெருவில் உள்ள பாழடைந்த வீட்டில் கடந்த 2ம் தேதி வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். தகவலறிந்து வந்த திருநின்றவூர் போலீசார், சடலத்தை கைப்பற்றி விசாரித்தனர். அதில், ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்த அஞ்சலை என்பவரின் வளர்ப்பு மகன் சதீஷ் (19) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அஞ்சலையை அழைத்து விசாரித்தபோது, முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளார். மேலும், மகன் இறந்ததற்கு கவலையின்றி காணப்பட்டார். இதனால், அவர் மீது சந்தேகம் எழுந்தது. அவரிடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், பல திடுக்கிடும் தகவல் வெளியானது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: அஞ்சலையின் கணவர் வீரபத்திரன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர்களுக்கு 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். மேலும், வளர்ப்பு மகனாக சதீஷும் இருந்து வந்துள்ளார். இதற்கிடையில் சமீபத்தில்தான் சதீசுக்கு  தான் வளர்ப்பு மகன் என்று தெரியவந்துள்ளது. இதனால், அவரது நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டது. போதை பழக்கத்துக்கு அடிமையான இவர், அடிக்கடி மது போதையில் வீட்டுக்கு வந்து அஞ்சலையிடம் தகராறு செய்துள்ளார். அதுமட்டுமின்றி, அஞ்சலையின் மகள்களிடமும் தகாத முறையில் நடந்துள்ளார். இதை பார்த்து அஞ்சலை கோபமடைந்து, வளர்ப்பு மகன் சதீசை கொலை செய்ய திட்டமிட்டார்.

 இதையடுத்து, கூலி தொழிலாளி காமராஜ் (53) என்பவரின் உதவியை நாடியுள்ளார். அவர், ஆவடியை சேர்ந்த சுரேஷ், முத்துகுமார், ஆந்திராவைச் சேர்ந்த விக்னேஷ் ஆகியோருடன் சேர்ந்து சதீஷை கொல்ல திட்டமிட்டார். இதற்காக, ரூ.1.60 லட்சம் பேரம் பேசி, முன்பணமாக ரூ.25 ஆயிரம் கொடுத்துள்ளார்.  பின்னர், திட்டமிட்டபடி கடந்த 1ம் தேதி இவர்கள் மூவரும் சதீசை திருநின்றவூரில் உள்ள பாழடைந்த வீட்டிற்கு அழைத்து சென்று, மது வாங்கி கொடுத்து கொலை செய்துவிட்டு தப்பியுள்ளனர். என தெரியவந்தது.  இதனையடுத்து, அஞ்சலை, காமராஜ், சுரேஷ் விக்னேஷ் ஆகிய 4 பேரை நேற்று மாலை போலீசார் பிடித்து  விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக உள்ள முத்துக்குமாரை தேடி வருகின்றனர்.

Tags : mercenaries ,daughters , Daughters, sexual harassment, son, mother arrested
× RELATED விஷக்கிழங்கு சாப்பிட்ட தொழிலாளி சாவு