பூந்தமல்லி: போரூரில் 50 லட்சம் மோசடி செய்ததாக சாப்ட்வேர் நிறுவனம் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போரூர், ராஜகோபால் நகர், கவுரி அம்மன் தெருவை சேர்ந்தவர் கிரன் குமார் (44). இவர் நேற்று போரூர் போலீசில் புகார் ஒன்றை அளித்தார். அதில், தான் வெளிநாட்டில் இருக்கும்போது ராஜேஷ், ரக்சன், ரோமி ஆகிய மூன்று பேர், சாப்ட்வேர் நிறுவனம் நடத்துவதற்கு, எனது கட்டிடத்தை வாடகைக்கு கேட்டனர். இதையடுத்து 37 லேப்டாப்புகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களுடன் சேர்த்து கட்டிடத்தை வாடகைக்கு கொடுத்தேன். ஆனால் இதுவரை வாடகை பணம் ஏதும் கொடுக்கவில்லை. தற்போது தன்னிடம் கூறாமல் எனக்கு சொந்தமான 16 லேப்டாப் உள்ளிட்ட பொருட்களை எடுத்துக்கொண்டு அலுவலகத்தை காலி செய்து விட்டு சென்று விட்டனர்.
இதுகுறித்து கேட்டபோது தனக்கு மிரட்டல் விடுக்கின்றனர். எனவே, இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்து இருந்தார். மேற்கண்ட 3 பேர் மீதும் இதேபோல் வேறு ஒரு புகாரும் வந்துள்ளது. ஆன்லைன் பண வர்த்தனை செய்வதாக கூறி, அதற்காக பார்கோட் கொண்ட ஸ்டிக்கர்கள் லட்சக்கணக்கில் பெற்று, அதற்கான பணம் கொடுக்காமல் ஏமாற்றி விட்டதாக அந்த புகாரில் தெரிவித்திருந்தனர். இதுவரை மொத்தம் சுமார் 50 லட்சம் வரை மோசடி செய்து விட்டு சென்று விட்டதாகவும் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து போரூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.