×

சுற்றுச்சூழல் அனுமதியின்றி அமைத்து வரும் மீன்பிடி துறைமுக பணிகளை அப்படியே நிறுத்த வேண்டும்: பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

சென்னை: திருவொற்றியூரில்  உரிய சுற்றுச்சூழல் அனுமதியின்றி மீன்வளத்துறை அமைத்து வரும் மீன்பிடி துறைமுக பணிகளை அப்படியே நிறுத்தி வைக்க வேண்டும். மேலும் மாசுகட்டுப்பாடு வாரியம், தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க  மதிப்பீட்டு ஆணையம்,  கடற்கரை ஒழுங்குமுறை மண்டல ஆணையம் ஆகியோர் கொண்ட குழு  நேரில் ஆய்வு செய்து ஒரு மாதத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம்  உத்தரவிட்டுள்ளது.காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் நிலவி வரும் நெரிசலைக் குறைக்கும் வகையிலும், சூரை மீன், இறால் உள்ளிட்ட ஆழ்கடல் மீன்பிடித் தொழிலை மேம்படுத்தவும் புதிய மீன்பிடித் துறைமுகத்தை அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது.  இதையடுத்து திருவொற்றியூரில் ரூ.242 கோடி மதிப்பீட்டில் ஆழ்கடல் மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி 2018 ஜூன் 6ம் தேதி சட்டப் பேரவையில்  அறிவித்திருந்தார். மீனவர்களிடையே இந்த அறிவிப்பு  நல்ல வரவேற்பையும் பெற்றிருந்தது.

 இது 500 முதல் 800 படகுகள் நிறுத்தும் அளவிற்கும் 60,000 டன் மீன்களைக் கையாளும் வகையிலும் வடிவமைக்கப்பட்டது.   இந்த துறைமுகம் அமைப்பதற்கான சுற்றுச்சூழல் மற்றும் கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அனுமதிகோரி  மீன்வளத்துறையானது தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறையிடம் அனுமதிகோரி விண்ணப்பித்திருந்தது. ஆனால், இந்த இரண்டு அனுமதிகளையும் பெறுவதற்கு முன்பாகவே துறைமுக கட்டுமானப் பணிகளை மீன்வளத்துறை தொடங்கியது. இதன்  காரணமாக திட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் கே.ஆர்.செல்வராஜ் என்பவர் வழக்கு தொடுத்திருந்தார்.இந்த வழக்கு நேற்று நீதித்துறை உறுப்பினர் ராமகிருஷ்ணன் மற்றும் நிபுணர் சாய்பால் தாஸ்குப்தா ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு தொடர்பான ஆவணங்களின்  அடிப்படையில் இத்திட்டத்திற்கு  இன்னும் சுற்றுச்சூழல் மற்றும் கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அனுமதி கிடைக்காத காரணத்தினால் துறைமுகம் கட்டும் பணியை அப்படியே நிறுத்தி வைக்கவும் மாசு கட்டுப்பாடு வாரியம், தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு  ஆணையம்,  கடற்கரை ஒழுங்குமுறை மண்டல ஆணையம் ஆகியோர் கொண்ட குழு  நேரில் ஆய்வு செய்து ஒரு மாதத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டனர்.


Tags : Green Tribunal , environment, permission, fishing port, Green Tribunal
× RELATED கனிமவள கொள்ளைக்கு எதிராக நடவடிக்கை:...