×

காட்டுமன்னார்கோயில் சட்டப்பேரவை தொகுதியில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. முருகுமாறன் வெற்றி செல்லும்: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: 2016ல் காட்டுமன்னார்கோயில் சட்டப்பேரவை தொகுதியில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. முருகுமாறன் வெற்றி செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. கடந்த 2016ல் காட்டுமன்னார்கோயில் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரான தொல்.திருமாவளவன், 87 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் முருகுமாறனிடம் தோல்வியடைந்தார். இதையடுத்து முருகுமாறன் வெற்றியை செல்லாது என்று அறிவிக்கக்கோரி திருமாவளவன் உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, திருமாவளவன் சார்பில் ஆஜரான வக்கீல் தபால் வாக்குகளை செல்லாது என்று தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார் என்று வாதிட்டார். இதைக்கேட்ட நீதிபதி, தபால் வாக்குகள் எண்ணிக்கையின்போது நிராகரிக்கப்பட்ட 102 தபால் வாக்குகளுடன் சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரி நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தார். வழக்கு கடந்த ஜனவரி 21ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, காட்டுமன்னார்கோவில் தொகுதி தேர்தல் அதிகாரி விஜயராகவன் வாக்கு எண்ணிக்கையின்போது நிராகரிக்கப்பட்ட 102 தபால் வாக்குகளுடன் நேரில் ஆஜரானார். சீலிடப்பட்ட தபால் வாக்குகளை ஆய்வு செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.

நீதிபதியின் முன் அந்த வாக்குகள் கொட்டப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. அப்போது, தேர்தல் அதிகாரி, இதில் ஒரு வாக்கு, வேறு தொகுதிக்கு பதிவான வாக்கு என்றும், மற்ற வாக்கு சீட்டுகள் செல்லாதவை என்பதால் நிராகரிக்கப்பட்டது என்றும் நீதிபதியிடம் தெரிவித்தார். இதைப்பதிவு செய்த நீதிபதி, இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார். இந்த நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில், 2016ல் காட்டுமன்னார்கோயில் சட்டப்பேரவை தொகுதியில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. முருகுமாறன் வெற்றி செல்லும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் நிராகரிக்கப்பட்ட 102 தபால் வாக்குகளை ஆய்வு செய்யக் கோரிய திருமாவளவனின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் வழக்கையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.


Tags : candidate ,AIADMK ,Kadumannarkoil ,MLA ,Chennai High Court ,Muruga Maran ,winning ,Kattumannarkoil Assembly ,constituency , Katumannarkoil, Election, Adhikam, Murukumaran, Chennai High Court, Thirumavalavan
× RELATED மசூதி மீது அம்பு விடுவது போன்ற சைகை...