கோக்ரஜார்: அசாமில் போடோ வட்டார மேம்பாட்டுக்கு தனி ஆணையம் அமைக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுள் ஒன்றான அசாமில், போடோலாந்து தனி மாநிலம் கோரி, தேசிய ஜனநாயக முன்னணி (என்.டி.எப்.பி) அமைப்பு போராடி வருகிறது. அதேபோல, அனைத்து போடோ மாணவர் கூட்டமைப்பு (ஏ.பி.எஸ்.யூ.) உள்ளிட்ட மாணவர் அமைப்புகளும் இக்கோரிக்கையை வலியுறுத்தி தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றன. இந்நிலையில், போடோலாந்து பிரச்னைக்கு தீர்வு காணும் விதமாக, இதற்கான தொடர் போராட்டங்களை நடத்தி வரும் என்.டி.எப்.பி., ஏ.பி.எஸ்.யூ உடன் மத்திய அரசு ஒப்பந்தம் செய்து கொண்டது.
இந்த ஒப்பந்தத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் அசாம் முதல்வர், என்டிஎப்பி அமைப்பின் முக்கிய தலைவர்கள், அசாம் தலைமை செயலாளர் உள்ளிட்டோர் ஜனவரி 27-ம் தேதி கையெழுத்திட்டனர். போடோ அமைப்புகள் - மத்திய அரசு - அசாம் அரசு இடையில் உடன்பாடு ஏற்பட்டதை கொண்டாடும் வகையில் அசாமில் பொதுக்கூட்டத்திற்கு இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன்படி அசாம் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, மண்ணின் மைந்தர்களின் நலனை கருத்தில் கொண்டு அசாம் மாநில அரசு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தெரிவித்தார். வடகிழக்கு மாநிலங்களில் சிக்கலான பிரச்சினைகளை தீர்க்க இதுவரை ஆண்ட யாரும் முன்வரவில்லை என்று குற்றம் சாட்டிய பிரதமர் மோடி, வெற்று வாக்குறுதிகளில் அல்ல; தமது அரசு செயலாற்றுவதிலேயே கவனம் செலுத்துவதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.