×

திருவொற்றியூரில் வெறிநாய் கடித்து 8 பேர் படுகாயம்

திருவொற்றியூர்:  திருவொற்றியூரில் வெறிநாய் கடித்ததில் 8 பேர் படுகாயமடைந்தனர்.திருவொற்றியூர் சோமசுந்தரம் பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிக அளவில் உள்ளது. இவை சாலையில் நடந்து செல்பவர்களை விரட்டி கடிக்க முயல்வதால் பொதுமக்கள் பீதியுடன் செல்கின்றனர். இந்நிலையில் திருவொற்றியூர் கார்கில் நகரைச் சேர்ந்த கல்லூரி மாணவி அனுசுயா (18), நேற்று மாலை கல்லூரி முடிந்து வீட்டுக்கு செல்வதற்காக  சோமசுந்தரம் நகர்  அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால்  வந்த வெறிநாய்  ஒன்று அவரை விரட்டி கடித்தது. உடனடியாக அவர் திருவொற்றியூர் எல்லையம்மன் கோயில் அருகே உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

 அதேபோல், அண்ணாமலை நகரை சேர்ந்த சரஸ்வதி, நிஷா, பூங்காவனம், ராஜம், உள்ளிட்ட 8 பேரை அந்த நாய் அடுத்தடுத்து துரத்தி கடித்துள்ளது. நாய் கடியால் காயமடைந்த 8 பேரும்  திருவொற்றியூர்  அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சென்றுள்ளனர்.
மருத்துவமனை டாக்டர் வசந்தி இதுகுறித்து திருவொற்றியூர் மண்டல உதவி கமிஷனர் பால் தங்கதுரையிடம் புகார் அளித்தார். அதன்படி  மாநகராட்சி சுகாதார ஊழியர்கள் அந்த வெறி நாயை பிடிக்க தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.



Tags : Thiruvottiyur ,TH , TH, 8 people, bitten ,rabies
× RELATED தீக்குளித்த பெண் சாவு கணவன் காயம்