×

ஒருதலை காதலால் விபரீதம் திருமணத்துக்கு பெண் தர மறுத்த பெற்றோர் மீது சரமாரி தாக்குதல்: வாலிபர் கைது

திருவொற்றியூர்: வீட்டில் பால் பாக்கெட் போடும்போது, பெண்ணுடன் ஏற்பட்ட ஒருதலை காதலால், அவரை பெண் கேட்டு சென்ற வாலிபர், பெண்ணின் பெற்றோர் மறுத்ததால், அவர்களை சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கொளத்தூர் வேல்முருகன் தெருவை சேர்ந்தவர் முனியன் என்ற முனியப்பன் (29). இவர், வீடுகளுக்கு பால் பாக்கெட் போடும் தொழில் செய்து வந்தார். மாதவரம், பொன்னியம்மன் மேடு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தினசரி பால் பாக்கெட் போடும்போது அந்த வீட்டில் உள்ள ஒரு பெண்ணை முனியப்பன் ஒருதலையாக காதலித்துள்ளார். இதனால், ஒவ்வொரு முறையும் பால் பாக்கெட் போடும்போது, அந்த பெண்ணிடம் வித்தியாசமாக சைகை காட்டுவது, சிரிப்பது போன்ற செயல்களில் முனியப்பன் ஈடுபட்டுள்ளார். ஆனால் அவரது செயலை அந்த பெண் சாதாரணமாக எடுத்துக்கொண்டார்.

இந்தநிலையில், இந்த பெண்ணுக்கும், அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் வரும் 27ம் தேதி திருமணம் செய்ய பெற்றோர் ஏற்பாடு செய்து வந்தனர்.இதுபற்றி அறிந்த முனியப்பன், நேற்று முன்தினம் இரவு அந்த பெண்ணின் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு, அந்த பெண்ணின் பெற்றோரிடம், “உங்கள் மகளை நான் காதலிக்கிறேன். எனவே, அவளை எனக்கு திருமணம் செய்து கொடுங்கள்” என்று கேட்டுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், தங்களது மகளை அழைத்து விசாரித்தபோது, அப்படி ஏதும் இல்லை, என மறுத்துள்ளார்.இதையடுத்து பெண்ணின் பெற்றோர் அந்த வாலிபரை எச்சரித்து, வெளியே செல்லும்படி கூறினர். இதனால் ஆத்திரமடைந்த முனியப்பன், அந்த பெண்ணின் பெற்றோரை சரமாரியாக தாக்கியுள்ளார். இதுகுறித்து  மாதவரம் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து முனியப்பனை பிடித்து காவல் நிலையம் அழைத்து சென்றனர். சம்பவம் தொடர்பாக, பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிந்து, முனியப்பனை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.



Tags : parents ,Volleyball attack ,attack ,Love Affair Volleyball , adulterous, love , parents , refused,woman
× RELATED பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, கொரோனா...