மதுரை: மதுரை நகர் பகுதியில் வைகை ஆற்றுக்குள் குப்பைகளை கொட்டாமல் தடுக்க, இரு கரையோரங்களிலும் மாநகராட்சி மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் கான்கிரீட் தடுப்புச்சுவர் கட்டும் பணி நடந்து வருகிறது. சேலம், ஆத்தூர் இடையபட்டி ஆதிதிராவிடர் தெருவைச் சேர்ந்த பெரியசாமி (34), வெங்கடேஷ் (30) மற்றும் சென்னை மேட்டுகுப்பம் பகுதியைச் சேர்ந்த பாபு (34) ஆகியோர், மதுரை, ஓபுளா படித்துறை பாலம் அருகே வைகை ஆற்றின் கரையோரம் கான்கிரீட் தடுப்புச்சுவர் கட்டும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
நேற்று முன்தினம் இரவு இவர்கள் ஆற்றின் கரையோரம் நிறுத்தப்பட்டிருந்த சிமென்ட் கலவை இயந்திர லாரியின் பின்புறம் படுத்து தூங்கினர். லாரி டிரைவர் ஆரோக்கியசாமி, நள்ளிரவில் திடீரென லாரியை பின்புறமாக எடுத்துள்ளார். இதில் அசந்து தூங்கிக் கொண்டிருந்த 3 பேர் மீதும் லாரியின் சக்கரங்கள் ஏறி இறங்கின. இதில் உடல் நசுங்கி வெங்கடேஷ், பெரியசாமி, பாபு ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.