திருவனந்தபுரம்: கேரள சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது முஸ்லிம் லீக் உறுப்பினர் ஷாஜி ஒத்திவைப்பு தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தார். அப்போது அவர் பேசுகையில், ‘‘கேரளாவில் தற்போது மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்து வருகிறது. இதில் பணியாற்றும் அதிகாரிகள் தேசிய குடிமக்கள் பதிவேடு தொடர்பான கேள்விகளையும் கேட்பது முஸ்லிம் சமுதாயத்துக்கு பீதியை ஏற்படுத்தி உள்ளது. இதன் மூலம் முஸ்லிம் சமுதாயத்தை அச்சுறுத்தி தங்களுடன் வைத்துக் கொள்ள அரசு முயற்சிக்கிறது’’ என்று கூறினார். இதற்கு முதல்வர் பினராய் விஜயன் பதிலளித்து கூறியதாவது: கேரளாவில் எந்த காரணம் கொண்டும் தேசிய குடிமக்கள் பதிவேடு அமல்படுத்தப்பட மாட்டாது. மக்கள் தொகை கணக்கெடுப்பு வேறு, தேசிய குடிமக்கள் பதிவேடு வேறு. தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு தனியாக கேள்விகள் உள்ளன. அந்த கேள்விகள் கேரளாவில் தவிர்க்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.