மண்ணச்சநல்லூர்: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தைத்தேர் திருவிழாவையொட்டி நாளை தைத்தேரோட்டம் நடைபெறுகிறது. சமயபுரம், திருவானைக்காவலில் நாளை தெப்ப உற்சவம் நடக்கிறது.திருச்சி ரங்கம் ரங்கநாதர் கோயிலில் தைத்தேர் எனப்படும் பூபதி திருவிழா கடந்த 30ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் காலை மாலை வெவ்வேறு வாகனங்களில் நம்பெருமாள் உத்திர வீதிகளில் வீதியுலா நடைபெற்று வருகிறது. 4ம் திருநாளான கடந்த 2ம் தேதி கருட சேவை நடந்தது. திருவிழாவின் 7ம் நாளான நேற்று நம்பெருமாள் உப நாச்சியார்களுடன் திருக்கொட்டாரத்தில் நெல்லளவு கண்டருளுனினார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை (7ம் தேதி) காலை நடைபெறுகிறது. அலங்கரிக்கப்பட்ட தேரில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் தேரில் வலம் வருவார். காலை 6 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. 9ம் தேதி ஆளும்பல்லக்கு நிகழ்ச்சியுடன் தைத்தேர் திருவிழா நிறைவடைகிறது. சமயபுரம்: சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தைத்தேர் திருவிழா நடந்து வருகிறது. இதையொட்டி தினமும் அம்மன் பல்வேறு அலங்காரத்தில் காட்சியளிக்கிறார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் நாளை இரவு நடைபெறுகிறது. திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயிலில் நாளை தெப்ப உற்சவம் நடைபெற உள்ளது.