டெல்லி: 70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு நாளை மறுநாள் தேர்தல் நடைபெறுகிறது. ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள ஆம் ஆத்மியும், தலைநகரை கைப்பற்ற பாஜகவும், காங்கிரசும் முழு முனைப்பில் களம் கண்டு வருகின்றனர். மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியோ திரை நட்சத்திரங்கள், அரசியல் பிரபலங்களை களமிறக்கியுள்ளது. தமிழர்கள் அதிகம் வசிக்கும் ஆர்.கே புறம், இந்திராபுரி ஷர்க்கார்பூர் உள்ளிட்ட பகுதிகளில் நடிகைகள் கௌதமி, காயத்ரி ரகுராம், கவிதா ஆகியோர் பரப்புரைக்காக வலம் வருகின்றனர். திரை நட்சத்திரங்களை போல, தமிழகத்தை சேர்ந்த பாரதிய ஜனதா கட்சிகளின் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.
முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, சி.பி. ராதாகிருஷ்னன், துணைத்தலைவர் நாகேந்திரன் ஆகியோருடன் பாஜகவில் இணைந்த சசிகலா புஷ்பாவும் டெல்லி தமிழர்களிடையே வாக்கு வேட்டையை நடத்தி வருகின்றனர். டெல்லியில் தென்னிந்தியர்கள் அதிகம் வசிக்கும் தொகுதிகளில் பாஜக சார்பில் திரை பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் வீதி வீதியாக வலம் வந்து, வாக்காளர்களை சந்தித்து வருகின்றனர். இதனைபோல், காங்கிரஸ் கட்சியிலும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, தமிழகத்தில் இருந்து நடிகை குஷ்பு உள்ளிட்டோர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடையுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், டெல்லி தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தித்தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு, டெல்லி வளர்ச்சிக்கு காங்கிரஸ் கட்சியே முக்கிய காரணம், இவ்வளவு பெரிய போராட்டத்தை மக்கள் நடத்தி வருகிறார்கள். ஆனால் ஆம்ஆத்மி கட்சியில் இருந்து யாரும் வந்து யார் இது தொடர்பாக விசாரிக்கவில்லை. ஜி என் யூ மாணவர்கள் போராட்டத்தை முதல்வர் அரவிந்த் கெஜிர்வால், கண்டுக்கொள்ளவில்லை. அறையில் இருந்துக்கொண்டு ஆட்சி செய்யும் முதல்வர் தேவையில்லை. மக்களவையில் இருந்துகொண்டு ராமர் கோயிலுக்கு அறக்கட்டளை அமைக்கும் பிரதமர் தேவையில்லை.
மக்கள் உடன் நிற்க வேண்டும், மக்கள் பிரச்சனையை கேட்க வேண்டும். அதுதான் ஒரு முதல்வருக்கும், பிரதமருக்கும் உள்ள அழகு. குடியுரிமை இல்லை என்றால் மக்களுக்கு நிச்சயம் கோபம் வரும். மக்கள் பல தலைமுறையாக இங்கு வாழ்ந்து வருகின்றனர். பாஜகவினர் செய்யும் தவறுகள் குறித்து அவர்களுக்கே தெரியும். மோடியின் ஆட்சியைப் பார்த்து ஹிட்லரின் ஆட்சியை அறியலாம் என்றும் குற்றம்சாட்டினார்.