சென்னை: டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு வழக்கில் முன்ஜாமின் கேட்டு தலைமை செயலக ஊழியர் கவிதா உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். டிஎன்பிஎஸ்சி குரூப்-4 மற்றும் குரூப்-2ஏ முறைகேடுகள் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, இதுவரை 14 பேரை கைதுசெய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தலைமை செயலக ஊழியர் கவிதா தன்னை கைதுசெய்யக்கூடுமென கருதி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ராமேஸ்வரத்தில் தனியார் துறையில் குரூப்-2ஏ தேர்வு எழுதியதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் தன்னுடன் தேர்வெழுதிய விக்னேஷ், சுதா ஆகியோரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். அதேபோல, தன்னையும் கைது செய்யக்கூடுமென அவர் தனது மனுவில் அச்சம் தெரிவித்துள்ளார்.
மேலும் கடந்த ஜனவரி மாதம் 23ம் தேதிதான் தனக்கு குழந்தை பிறந்துள்ளது. ஆகையால், தற்போது மகப்பேறு விடுப்பில் உள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இதனால், தனக்கு முன்ஜாமின் வழங்கவேண்டுமென தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு தற்போது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் துறை தரப்பிலிருந்து மனு குறித்த விபரமளிக்க காலஅவகாசம் வேண்டுமென கேட்கப்பட்டது. தொடர்ந்து விசாரணை நடத்திய நீதிபதி, மனுவிற்கு பதிலளிக்கும்படி சிபிசிஐடி போலீசாருக்கு உத்தரவிட்டார். பின்னர், வழக்கு விசாரணையை வரும் பிப்ரவரி 13ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.