புதுடெல்லி: கடந்த 5 ஆண்டுகளில் ஊழலில் ஈடுபட்ட 320 அதிகாரிகளுக்கு கட்டாய பணி ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களின் பணித்திறன் குறித்து குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆய்வு செய்து, திறமையற்ற பணியாளர்களுக்கு கட்டாய பணி ஓய்வு அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக, பணியாளர் நல விதி எண் 56- ஜே பின்பற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில், மக்களவையில் ஊழல் அதிகாரிகள் தொடர்பான கேள்விக்கு மத்திய பணியாளர் நலத்துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் நேற்று பதில் அளித்தார்.
அதில் அவர், `மத்திய பணியாளர் பயிற்சி மற்றும் நலத்துறையின் இணையதளத்தில் பல்வேறு துறைகள் மற்றும் அமைச்சகங்கள் சார்பில் சில தகவல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 30ம் தேதியை அடிப்படியாக கொண்டு விதி எண் 56 உள்ளிட்டவைகளை அடிப்படையாக கொண்டு, கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 320 ஊழல் அதிகாரிகளுக்கு முன்கூட்டியே கட்டாய பணி ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2014ம் ஆண்டு ஜூலை மாதம் தொடங்கி கடந்த ஆண்டு டிசம்பர் வரையிலான 5 ஆண்டு காலத்தில் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் அதிகாரிகள் 163 பேர், பி பிரிவு அதிகாரிகள் 157 பேர் என மொத்தம் 320 அதிகாரிகள் இவ்வாறு நீக்கப்பட்டுள்ளனர்,’ என கூறப்பட்டுள்ளது.