×

தமிழர்களின் விரோதியாக தன்னை அடையாளப்படுத்தியதன் மூலம் பாஜவுக்கு பல்லக்கு தூக்குவதற்கு ரஜினிகாந்த் தயாராகிவிட்டார் : கே.எஸ்.அழகிரி கடும் தாக்கு

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்ட அறிக்கை:  குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து இதுவரை கருத்து தெரிவிக்காமல் இருந்த நடிகர் ரஜினிகாந்த், ‘இதனால் நாட்டு மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது, அரசியல் கட்சிகள் மக்களிடையே தவறான பிரசாரத்தின் மூலம் பீதியை கிளப்பி வருகிறார்கள்’ என்று கருத்து கூறியிருக்கிறார். ரஜினிகாந்த் யார் என்பதை அடையாளம் காட்டுவதற்கு இக்கருத்து ஒன்றே போதும். ஆன்மீக அரசியல் என்ற முகமூடி இன்றைக்கு கிழித்தெறியப்பட்டிருக்கிறது. மதங்களை பிளவுபடுத்துவது தான் ரஜினிகாந்தின் ஆன்மீக அரசியலா? சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகளுக்குப் பிறகு நீ எந்த மதத்தைச் சார்ந்தவன்? உன் தந்தை எந்த மதத்தைச் சார்ந்தவன்? நீ எங்கே பிறந்தாய்? என்று ரிஷிமூலம், நதிமூலம் கேட்டு ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறுவது தான் ஆன்மீக அரசியலா? நண்பர் ரஜினிகாந்த், ‘உடன் இருப்பவர்கள் கூறுவதை நம்பி பேசுவதனால் பல விளைவுகளை இதுவரை சந்தித்து வருகிறீர்கள். இந்நிலை தொடர்ந்தால் கடுமையான வீழ்ச்சியை நோக்கி நீங்கள் தள்ளப்படுவீர்கள்’ என்று உங்களை எச்சரிக்க விரும்புகிறேன். அரசியல் வேறு, சினிமா வேறு. சினிமாவில் கதை வசனம் எழுதினால் அதை அப்படியே பேசுவது உங்களுக்கு கைவந்த கலை.

ஆனால், அரசியலில் பிறர் எழுதிக் கொடுப்பதை நீங்கள் உள்வாங்கிக் கொண்டு அதை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா? என்று உங்கள் அறிவைப் பயன்படுத்தி ஒரு முடிவிற்கு வந்த பிறகு நீங்கள் கருத்து கூறுவது ஆரோக்கியமான அரசியலுக்கு வழிவகுக்கும். அசாமில் அமைக்கப்பட்டிருப்பதைப் போல தடுப்பு முகாம்களை இந்தியா முழுவதும் அமைக்க வேண்டுமென்று ரஜினிகாந்த் விரும்புகிறாரா?. இலங்கைக்கு செல்ல விரும்பாத பெரும்பாலானவர்களுக்கு அவர்கள் விருப்பத்திற்கேற்ப இந்திய குடியுரிமை வழங்க மத்திய பாஜ. அரசின் குடியுரிமை திருத்தச் சட்டம் வாய்ப்பு வழங்கவில்லை. இதை கண்டிக்கிற வகையில் ரஜினிகாந்த் குரல் கொடுப்பாரா?. தமக்கிருக்கும் செல்வாக்கை பயன்படுத்தி, நரேந்திர மோடியிடம் பேசுவாரா? இதையெல்லாம் கண்டும் காணாமல் பொத்தாம் பொதுவாக குடியுரிமை சட்டத் திருத்தத்தை ஆதரித்து பேசுகிற ரஜினிகாந்தை தமிழக மக்கள் புரிந்து கொள்வதற்கு ஒரு வாய்ப்பை அவரே வழங்கியிருக்கிறார். அவர் யார் என்பது இப்போது தெரிந்து விட்டது.

இதன் மூலம் தமிழர்களின் விரோதியாக தம்மை அடையாளப்படுத்திக் கொண்டுள்ளார்.எனவே, தமிழக அரசியலில் வகுப்புவாத பாஜவுக்கு பல்லக்கு தூக்குவதற்கு ரஜினிகாந்த் தயாராகிவிட்டார். ரஜினிகாந்தின் ஆன்மீக அரசியல் முகமூடி இன்றைக்கு அம்பலப்படுத்தப்பட்டிருக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
 
விசிக தலைவர் திருமாவளவன்:  சங்பரிவார் அமைப்பின் குரலாக ரஜினிகாந்த் மாறி விட்டார். ஏனோ தானோ என்று இல்லாமல் திட்டமிட்டே இதுபோன்று பேசி வருகிறார். எந்த எதிர்வினையையும் மாணவர்கள் தங்கள் போராட்டம் மூலமாக வெளிப்படுத்துவது  வழக்கமானதுதான். அவர்களுக்கு ரஜினிகாந்த் அறிவுரை சொல்லவேண்டிய அவசியம் இல்லை.

Tags : KS Alagiri Rajinikanth ,enemy ,Tamils ,Baja ,KS Alagiri , Rajinikanth prepares ,lift Baja tooth, KS Alagiri
× RELATED யூடியூப் சேனல்களை...