×

ஒட்டன்சத்திரம் அருகே திருமாணிக்கபுரத்தில் அதிமுக பிரமுகருக்கு சொந்தமான கல்குவாரியால் பொதுமக்கள் கலக்கம்: வெடி சத்தத்தால் வீடுகள் அதிர்வதாக புகார்

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகே உள்ள திருமாணிக்கபுரத்தில் அதிமுக பிரமுகருக்கு சொந்தமான கல்குவாரியின் வெடிச்சத்தத்தால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருவதாக புகார் கூறுகின்றனர். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கேதையுறும்பு ஊராட்சிக்குட்பட்ட திருமாணிக்கபுரத்தில் பலக்கனூத்து செல்லும் சாலையில் அதிமுக பிரமுகருக்கு சொந்தமான கல்குவாரி உள்ளது. இது பல ஆண்டுகளாக செயல்படாமல் இருந்து வந்தது. தற்போது இந்த குவாரியை இயக்குவதற்கான வேலைகள் நடைபெற்று வருகிறது. இதன் சோதனை ஓட்டமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வெடிகள் வைத்தனர்.

இதில் அருகில் குடியிருக்கும் 300க்கும் மேற்பட்ட பொதுமக்களின் வீடுகளில் அதிர்வுகள் ஏற்படுவதாகவும், விவசாய நிலங்களில் கற்கள் தெறிப்பதாகவும், சத்தம் அதிகமாக இருப்பதாகவும் கூறுகின்றனர். இது குறித்து இப்பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன், சண்முகம், சரவணன் ஆகியோர் கூறியதாவது, இப்பகுதியில் தற்போது குவாரி இயங்குவதற்கான வேலைகள் நடைபெற்று வருகிறது. குவாரியைச் சுற்றி அதிகளவில் விவசாய நிலங்களும், பொதுமக்களும் குடியிருந்து வருகின்றனர். இவ்வழியாக சட்டையப்பனூர், நாலுபுலிக்கோட்டை, தாசவநாயக்கன்பட்டி, வெள்ளைச்சாமிகவுண்டன்புதூர், கஸ்தூரிபாய் காலனி, தாதகவுண்டனூர், மூலச்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகள் செல்லும் முக்கியத் தடமாகவும், காலை, மாலை என இருவேளைகளில் 10க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி, நூற்பாலை வேன்களும் சென்ற வருகின்றன.

மேலும் இக்குவாரியைச் சுற்றி மின்மாற்றிகள், மின்சார வயர்கள் செல்வதாலும் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடனே வாழ்ந்து வருகின்றனர். எனவே பொதுமக்கள் நலனை கருத்தில்கொண்டு கல்குவாரியின் அங்கீகாரத்தை ரத்து செய்து பொதுமக்களின் அச்சத்தைப் போக்க வேண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : AIADMK ,Thirumanikapuram ,Houses ,explosion ,Ottansatham ,Kalukwari , Ottansatram, Kalquari, Explosive Noise
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...