சேலம்: சேலம் வணிக வளாகத்தில் அதிகாலையில் பழ வியாபாரி தலையில் கல்லை போட்டு படுகொலை செய்யப்பட்டார். அப்பகுதியில் ஏற்கனவே 2 முதியவர்களை கொலை செய்த சைகோவுக்கு தொடர்பிருப்பதாக கூறப்படுவது, பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது. சேலம் பழைய பஸ் ஸ்டாண்டில் மாநகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகத்தில் முதியவர் ஒருவர் நேற்று அதிகாலை ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அருகில் பெரிய கல் கிடந்தது. போலீஸ் விசாரணையில் அவர் பொன்னம்மாப்பேட்டையை சேர்ந்த பழவியாபாரி அங்கமுத்து (85) என்பது தெரியவந்தது. நேற்று முன்தினம் போதையில் வணிக வளாகத்தில் படுத்திருந்த போது மர்மநபர் அவரது தலையில் கல்லை தூக்கி போட்டு கொலை செய்துள்ளார். அந்த மர்ம வாலிபர் படம் சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது.
சூரமங்கலத்தில் நேற்று முன்தினம் பிச்சைக்காரரிடம் மர்மநபர் பணம் திருடியுள்ளார்.அப்போது ஏற்பட்ட தகராறில் அவரை மர்ம நபர் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்துள்ளார். இதேபோல சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே நிழற்குடை பகுதியில் .கடந்த 2ம்தேதி 55 வயது நபர் தலையில் ரத்தம் வழிந்த நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்ட்ட அவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார். இப்படி 3 நாளில் 3 பேரை சைக்கோ வாலிபர் தீர்த்துக்கட்டியதால் சேலம் மாநகர மக்கள் மத்தியில் பெரும்பீதி ஏற்பட்டுள்ளது. அந்த சைக்கோ வாலிபர் படத்தை அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களுக்கும் அனுப்பி வைத்து போலீசார் உஷார் படுத்தியுள்ளனர். இது தொடர்பாக 40 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.