×

எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் துப்பாக்கி, பட்டா கத்தியுடன் பயங்கர மோதல்

சென்னை: சென்னை அடுத்த காட்டாங்கொளத்தூர் அருகே எஸ்.ஆர்.எம் பல்கலை மாணவர்கள் துப்பாக்கி, பட்டா கத்தியுடன் பயங்காரமாக மோதிக்கொண்டனர். இதில், மூன்று பேர் படுகாயம் அடைந்து ஆபத்தான நிலையில் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். செங்கல்பட்டு அடுத்த காட்டாங்கொளத்தூரில்  எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் உள்ளது. இந்த வளாகத்தில் பொறியியல் கல்லூரி, மருத்துவ கல்லூரி, சட்டக்கல்லூரி, செவிலியர் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகள் செயல்படுகின்றன. இந்த கல்லூரிகளில்  தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று மாலை எம்.பி.ஏ. இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. பின்பு, கைகலப்பாக மாறி கல்லூரி வளாகத்திலேயே ஒருவரை ஒருவர் பட்டா கத்தியால் தாக்கிக் கொண்டனர். அதில், ஒரு வாலிபர் கையில் துப்பாக்கியுடன் மற்ற மாணவர்களை நோக்கி சுடுவதற்கு துரத்திச் சென்றுள்ளார். இதைப் பார்த்ததும் அங்குள்ள சக மாணவர்கள், மாணவிகள் அலறியடித்து சத்தம் போட்டு  தலைதெறிக்க ஓடினர். இந்த சம்பவத்தால் பல்கலைக்கழக வளாகம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.

மோதலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்த மாணவர்கள் சிலரை பட்டா கத்தியால்  வெட்டியதில்  மூவருக்கு தலையில்  பலத்த காயம் ஏற்பட்டது. அவர்கள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து அறிந்ததும் மறைமலைநகர் போலீசார், சம்பவ இடத்துக்கு வந்தனர். வண்டலூர் டி.எஸ்.பி. ரவிச்சந்திரன், மறைமலைநகர் இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் 50க்கும் மேற்பட்ட போலீசார் கல்லூரிக்குள் சென்று மோதல் ஏற்பட்ட இடங்களை ஆய்வு செய்தனர். பட்டாகத்தி மற்றும் ஆயுதங்களை கைப்பற்றினர். அங்குள்ள முக்கிய பகுதிகளில் உள்ள  கேட்டுகளை மூடி  மாணவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பல்கலைக்கழக வளாகத்தில் பட்டப்பகலில் மாணவர்களிடையே பட்டா கத்தி, துப்பாக்கி மற்றும் பயங்கர ஆயுதங்களுடன் மோதலில் ஈடுபட்டது சக மாணவர்கள் இடையே பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.  

கல்லூரியில் கூலிப்படை தலைவர்களின் தலையீடு உள்ளதா? காதல் விவகாரத்தில் மோதல் ஏற்பட்டதா? மாணவர்களிடையே ரூட் தல உருவாவதற்கு ஏற்பட்ட மோதலா? அல்லது முன்விரோதம் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மாணவர் கலவரத்தில் துப்பாக்கியுடன் மோதலில் ஈடுபட்டவர்களுக்கு  எப்படி துப்பாக்கி வந்தது. கள்ளத்துப்பாக்கியா? தீவிரவாதிகளுடன் தொடர்பா? பின்னணியில் யார் உள்ளனர் என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர். போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், மறைமலைநகர் நகர அதிமுக பிரமுகர் மகன்தான் கையில் துப்பாக்கியை வைத்து மோதலில் ஈடுபட்டார் என்பதும், காட்டாங்கொளத்தூர் ஒன்றிய அதிமுக பிரமுகரின் பேரன்  இந்த மோதலில் கத்தியுடன் அடிதடியில் ஈடுபட்டதாகவும் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து  போலீசார் கல்லூரிகளுக்கு சென்று தற்போது விசாரணை மேற்கொண்டும், இந்த வீடியோ காட்சியில் பதிவான மாணவர்களை தேடி வருகின்றனர்.

இதேபோல் கடந்த வருடம் ஒரு  ரவுடியின் பிறந்தநாள் விழாவை கல்லூரி மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் இருசக்கர வாகனம் மீது வைத்து பெரிய வீச்சறிவாளால்   கேக் வெட்டி கொண்டாடிய சம்பவமும் இந்த கல்லூரியில் அரங்கேறியுள்ளது. கல்லூரி வளாகத்தில் கஞ்சா அதிக அளவில் மாணவர்களுக்கு சப்ளை செய்யப்படுவதாகும் வெளிமாநில மாணவர்கள் இதில் ஈடுபடுவதாகவும் அவ்வப்போது மாணவர்கள் போலீசாரால் கைது செய்யப்படுகின்றனர் குடிபோதையில் ரகளையில் ஈடுபடுவதும் விபத்து ஏற்படுத்துவதும் தொடர்கிறது. இதேபோல், கடந்த வருடம் வண்டலூர் அருகே உள்ள வேங்கடமங்கலம் என்ற பகுதியில் ஒரு கல்லூரி மாணவன் முகேஷ் என்பவரை அவருடைய நண்பர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் இந்த பகுதியில் அரங்கேறியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் தொடர்ந்து துப்பாக்கி சுலபமாக அனைவரது கையிலும் கிடைக்கின்றது. மாணவர்கள் கையிலும் சுலபமாக கிடைக்கிறது.

ரவுடிகளின் கையில் இருக்கும் கள்ளத்துப்பாக்கிகள் தற்போது கல்லூரி மாணவர்களிடையே சுலபமாக கிடைப்பதால் இது போன்ற மோதல் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக  பொதுமக்கள் மாணவர்கள் அதிர்ச்சியுடன் தெரிவிக்கின்றனர். முறையாக அனுமதி பெறாமல் முறைகேடாக கள்ளத்தனமாக துப்பாக்கிகள் வைத்திருக்கும் கல்லூரி மாணவர்கள் கையில் துப்பாக்கி வந்தது எப்படி என்பது குறித்தும் பின்னணியில் யார் உள்ளனர்  என்பது குறித்தும்  துப்பாக்கியுடன் தப்பியோடியவரை  மறைமலைநகர் போலீசார் தேடிவருகின்றனர்.

Tags : campus ,SRM University , Students clash, SRM University campus
× RELATED கிம்ஸ் ஹெல்த் இலவச இதய மருத்துவ முகாம்...