×

தன்னை பிடிக்க வீட்டின் வெளியே காத்திருப்பதை அறிந்து போலீஸ்காரர் பைக்கில் தப்பிச்சென்ற பலே திருடன்: சித்தூர் அருகே சுவாரஸ்யம்

ஸ்ரீகாளஹஸ்தி: சித்தூர் அருகே தன்னை பிடிக்க வீட்டின் வெளியே போலீஸ்காரர் காத்திருப்பதை அறிந்த பலே திருடன் அவரது பைக்கிலேயே தப்பிச்சென்ற சம்பவம் நடந்துள்ளது. ஆந்திராவின் மதனபல்லி 2வது நகர காவல் நிலையம் அருகில் வசிப்பவர் உதயகுமார். இவர் பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் தம்பலபல்லி பகுதியில் நடந்த ஒரு திருட்டு சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர். இதில் உதயகுமாருக்கு தொடர்பிருப்பது தெரியவந்தது. இதனால்  சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் நேற்று முன்தினம் உதயகுமாரை கைது செய்வதற்காக அவரது வீட்டின் வெளியே காத்திருந்தார். இதை அறிந்துகொண்ட உதயகுமார், தனது வீட்டின் பின்பக்கம் வழியாக சுவர் ஏறி குதித்து வெளியே வந்தார். பின்னர் நைசாக வந்து அங்கு காத்திருந்த சப்-இன்ஸ்பெக்டரின் பைக்கை திருடிக்கொண்டு தப்பி தலைமறைவாகி விட்டார்.

இதை அறிந்து அதிர்ச்சியடைந்த சப்-இன்ஸ்பெக்டர் உடனடியாக தம்பலபல்லி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தொடர்ந்து போலீசார் அப்பகுதியில் பல்வேறு இடங்களில் தேடியும் உதயகுமார் கிடைக்கவில்லை. இதற்கிடையே குர்ரம்கொண்டா மண்டலம், சிட்டிபோயன பல்லி அருகில் உள்ள ஷிர்டி  சாய் பாபா கோயில்  உண்டியலை உடைத்து பணம் திருட்டு போனதாக புகார் வந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், உதயகுமார் கோயிலின் பூட்டை உடைத்து உண்டியல் பணத்தை திருடிச்சென்றது அங்கிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகியிருந்தது.  அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து உதயகுமாரை தேடி வருகின்றனர். இதற்கிடையே உதயகுமாரின் சகோதரரான குமாரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து சப்-இன்ஸ்பெக்டரின் பைக்கை பறிமுதல் செய்தனர்.


Tags : policeman ,Chittoor ,house , Policeman Pike, Thief, Chittoor
× RELATED நடைபெற உள்ள பொதுத்தேர்தலில்...