திருவொற்றியூர்: மாதவரம் மண்டலத்தில் பாதாள சாக்கடை திட்டம் நடைமுறையில் உள்ள பகுதிகளில் “அழைத்தால் வீடு தேடி இணைப்பு” என்ற திட்டத்தின் கீழ், வீடுகளுக்கு கழிவுநீர் இணைப்பு கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் 28ம் தேதி மாதவரம் விநாயகபுரம் பகுதியில் வீடுகளுக்கு பாதாள சாக்கடை இணைப்பு கொடுக்கும் பணியில் மாதவரம் பொன்னியம்மன் மேடு பகுதியை சேர்ந்த தொழிலாளி பாலகுமாரன், மேற்பார்வையாளர் பிரகாஷ் மற்றும் சிலர் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த மாதவரம் லட்சுமிபுரத்தைச் சேர்ந்த புரட்சி ராஜேஷ் மற்றும் சிலர், பாலகுமாரனை மாமூல் கேட்டு மிரட்டியுள்ளனர். அவர் தர மறுத்ததால், ஆத்திரமடைந்த அவர்கள் அவரை கடுமையாக தாக்கி அவரிடம் இருந்து 10 ஆயிரத்தை பறித்துள்ளனர்.
இதை தட்டிக்கேட்ட பிரகாஷையும் தாக்கிவிட்டு சென்றுள்ளனர். இது சம்பந்தமாக இவர்கள் கொடுத்த புகாரின் பேரில் புழல் காவல் நிலைய போலீசார் புரட்சி ராஜேஷ், தினேஷ், விக்கி உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்தநிலையில் பிரகாஷ் மற்றும் 25க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் மாதவரம் பால்பண்ணை காவல் நிலையத்திற்கு நேற்று காலை வந்து, புரட்சி ராஜேஷை கைது செய்ய கோரி காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக துணை கமிஷனர் தெரிவித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.