சென்னை: திருச்சியில் கடந்த 2019ம் ஆண்டு பிரபல நகைக்கடையின் பின்பக்க சுவரை துளையிட்டு பல லட்சம் மதிப்புள்ள நகைகள் கொள்ளயைடிக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. போலீசார் விசாரணையில், திருவாரூரை சேர்ந்த பிரபல கொள்ளையன் முருகன் என்பவர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரிந்தது. இவர், தமிழகத்தின் பல மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது. அவரை தேடி வந்தனர். இந்நிலையில், பெங்களூரில் நடந்த ஒரு கொள்ளை சம்பவம் தொடர்பாக, அம்மாநில போலீசாரால் முருகன் கைது செய்யப்பட்டு, பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டு இருப்பது தெரிந்தது.
தமிழக போலீசார், பெங்களூர் சிறைக்கு சென்று, முருகனை காவலில் எடுத்து சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி, மீண்டும் சிறையில் அடைத்தனர். இந்நிலையில், சென்னை அண்ணாநகர் பகுதியில் உள்ள வீடுகளில் கடந்த 2017ம் ஆண்டு தொடர் கொள்ளை நடந்தது. இதில், கொள்ளையன் முருகனுக்கு தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். இதையடுத்து, அண்ணாநகர் துணை ஆணையர் முத்துசாமி தலைமையில் போலீசார், முருகனை போலீஸ் காவலில் சென்னை அழைத்து வந்து, கடந்த இரண்டு தினங்களாக தீவிரமாக விசாரணை நடத்தினர். பின்னர் எழும்பூர் நீதிமன்றத்தில் முருகனை நேற்று ஆஜர்படுத்தி, மீண்டும் முருகனை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். அப்போது, முருகனிடம் இருந்து பல தகவல் கிடைக்கலாம், என போலீசார் தெரிவித்தனர்.