×

தேர்தலில் தோல்வியடைந்தும் ஊருக்கே விருந்து வைத்த திமுக வேட்பாளர்

புவனகிரி: கடலூர் அருகே தேர்தலில் தோல்வியடைந்த திமுக வேட்பாளர் ஊருக்கே விருந்து வைத்து அசத்தியுள்ளார். கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பரங்கிப்பேட்டை ஒன்றியம் கடலூர் கிழக்கு மாவட்ட திமுகவில் வரும். இந்த ஒன்றியத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் 25வது வார்டு மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிக்கு திமுகவை சேர்ந்த பரங்கிப்பேட்டை ஒன்றிய செயலாளர் முத்து பெருமாள் என்பவர் போட்டியிட்டார். குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார்.

இவர் தேர்தலில் போட்டியிட்ட பரங்கிப்பேட்டை ஒன்றியம் பெரியப்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட பெரியாண்டிக்குழி கிராமத்தில் ஊர் விருந்து என்ற பெயரில் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்து விருந்து பரிமாறினார். அக்கிராமத்தை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்று பிரியாணி விருந்து சாப்பிட்டனர். பின்னர் திமுகவிற்கு புதிதாக விருப்பமுள்ள 125 நபர்களை உறுப்பினர்களாகவும் சேர்த்தார். இதுகுறித்து முத்து பெருமாள் கூறுகையில், தேர்தலில் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தாலும் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தேன். ஊர் விருந்து என்ற பெயரில் விருந்து வைத்து பிரியாணி பரிமாறி மகிழ்ச்சி அடைந்தேன் என்றார்.

Tags : candidate ,election ,DMK ,city , losing , election, DMK candidate who had the feast
× RELATED விருதுநகர் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் துவக்கம்