ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே விவசாய நிலத்தில் அனுமதி இன்றி பயிர்களை பிடிங்கி, இயற்கை எரிவாயு குழாய் பதிக்கப்பட்டதால், விவசாயிகள் மறியலில் ஈடுபட்டனர். ராமநாதபுரத்திலிருந்து துாத்துக்குடி ஸ்பிக், ஸ்டெர்லைட் டி.சி., டபிள்யூ., நிறுவனங்களுக்கு கேஸ் விநியோகிக்க, பூமிக்கடியில் குழாய்களை பதிக்க மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. குழாய்கள் பதிக்கும் பணியினை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் நடத்தி வருகிறது. இதனை தொடர்ந்து, ராமநாதபுரத்தை அடுத்த வாலாந்தரவை என்ற கிராமத்தில் சம்மந்தப்பட்ட விவசாயிகளின் அனுமதியின்றி, வளர்ந்த பயிர்களை பிடிங்கி வீசி, ஜே.சி.பி இயந்திரம் மூலமாக குழாய் பதிக்கும் பணியில் எண்ணெய் நிறுவனம் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதனை கண்டித்து ஜே.சி.பி இயந்திரத்தையும், குழாய்களை ஏற்றி வந்த லாரியையும் விவசாயிகள் சிறைபிடித்து போராட்டம் நடத்தினர். நன்கு வளர்ந்த தென்னங்கன்று, கடலை பயிர், மிளகாய் மற்றும் தக்காளி தோட்டம் உள்ளிட்டவற்றை ஜே.சி.பி இயந்திரம் கொண்டு நாசம் செய்து விட்டதாக விவசாயிகள் குற்றம் சாட்டினர். விவசாயிகள், தங்களின் அனுமதியின்றி குழாய் பதிக்கப்பட்டதாகவும், மேலும் கடன் வாங்கி இதனை பயிரிடப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தனர். மேலும், இதுபோன்ற சம்பவம் நடந்திருப்பது தங்களுக்கு பெரும் நஷ்டத்தையும், மன உளைச்சலையும் ஏற்படுத்தி இருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.