திருமலை: விசாகப்பட்டினத்தில் தலைமை செயலகத்துக்கான கட்டிடம் கட்ட 19.73 கோடி நிதியை ஆந்திர அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.ஆந்திர மாநில தலைநகராக எந்தப் பகுதி அமையும் என ஒருபுறம் சர்ச்சை ஏற்பட்டு வரும் நிலையில் சந்திரபாபு ஆட்சியில் இருந்தபோது தலைநகராக அறிவிக்கப்பட்ட அமராவதியில் நிலம் வழங்கிய விவசாயிகள் 49வது நாளாக தொடர்ந்து போராட்டம் செய்து வருகின்றனர். இந்நிலையில் விசாகப்பட்டினம் நிர்வாக தலைநகராகவும், அமராவதி சட்டப்பேரவை தலைநகராகவும், நீதிமன்ற தலைநகராக கர்னூலையும் மாநில அரசு அறிவித்தது.
ஆனால் அரசின் மூன்று தலைநகர் குறித்து சட்ட மேலவையில் தேர்வு கமிட்டிக்கு பரிந்துரை செய்யப்பட்ட நிலையில் சட்ட மேலவையை கலைத்து மாநில அரசு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது. இந்நிலையில் விசாகப்பட்டினத்தில் நிர்வாக தலைநகர் அமையும் என்று அரசு கூறியுள்ளதால் மதுராவாடாவில் மில்லேனியம் டவர்-பி கட்டுமானத்திற்காக ₹19.73 கோடியை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.