புதுடெல்லி: டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 8ம் தேதி நடைபெற உள்ளது. ஆம் ஆத்மி, பாஜ, காங்கிரஸ் உள்ளிட்ட பிரதான கட்சிகள் அனல் கக்கும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்ய தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இந்நிலையில், தனியார் விமான நிறுவனமான ஸ்பைஸ் ஜெட் அதிரடி அறிவிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ‘‘டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் வாக்களிக்க 8ம் தேதி வருபவர்கள் விமான கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.
ஆனால் வரி மற்றும் இதர அரசுக்கு செலுத்த வேண்டிய கட்டணங்களை செலுத்தினால் போதுமானது. இதற்காக முன்பதிவு செய்பவர்களை எங்களது குழு பரிசீலித்து தேரந்தெடுக்கும். நபர்களின் அடிப்படை கட்டணம் ரத்து செய்யப்படும். ஆனால் அவர்கள் அனைத்து வரிகளையும், இதர கட்டணங்களையும் செலுத்த வேண்டும். 8ம் தேதி காலை வந்துவிட்டு அன்றே திரும்பும் பயணிகளுக்கு மட்டுமே இந்த சலுகை தரப்படும்’’ என்று கூறப்பட்டுள்ளது.