சென்னை: புழல் மத்திய சிறையில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் மற்றும் மகளிர் சிறைச்சாலை என தனித்தனியாக இயங்கி வருகிறது. இதில் சுமார் 120 பெண்கள் உள்ளிட்ட 2500 கைதிகள் உள்ளனர். சிறைக்குள் பலத்த போலீஸ் பாதுகாப்பையும் மீறி செல்போன், கஞ்சா உள்ளிட்டவற்றை கைதிகள் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது.இந்நிலையில், விசாரணை சிறையில் அடைக்கப்பட்டுள்ள துரைப்பாக்கம் கண்ணகி நகரை சேர்ந்த பிரசாத் (எ) அயிட்டு பிரசாத் (25), அம்பத்தூர் ஒரகடம் சரண்குமார் (26), திருவல்லிக்கேணி வினோத்குமார் (29), மணலி முஹம்மது ரிஸ்வான் (20), திருவான்மியூர் ஆகாஷ் (20), அம்பத்தூர் கள்ளிக்குப்பம் கணேஷ்குமார் (25) ஆகியோர் கஞ்சா அடித்ததாக கூறப்படுகிறது.
அதே சிறையில் உள்ள துரைப்பாக்கம் கண்ணகி நகரை சேர்ந்த ராஜேஷ் (எ) பப்லு (26) என்பவர் இதுபற்றி உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி அறிந்த 6 பேரும், ராஜேஷை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த பப்லு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.இதுகுறித்து ஜெயிலர் அப்துல் ரகுமான், புழல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதனால் சிறைச்சாலையில் பரபரப்பு ஏற்பட்டது.