×

காந்தியின் போராட்டம் பற்றி சர்ச்சை கருத்து பா.ஜ எம்.பி மீது தேசத்துரோக வழக்கை பதிய காங். கோரிக்கை: பிரதமர் மோடி மன்னிப்பு கேட்கவும் வலியுறுத்தல்

மும்பை: ‘‘காந்தியின் சுதந்திர போராட்ட இயக்கம் பற்றி சர்ச்சை கருத்து தெரிவித்த பா.ஜ எம்.பி அனந்த்குமார் ஹெக்டே மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும், இதற்கு பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. பெங்களூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜ எம்.பியுமான அனந்த்குமார் ஹெக்டே, ‘‘சுதந்திர போராட்ட இயக்கம் முழுவதும் ஆங்கிலேயர்களின் சம்மதம் மற்றும் ஆதரவுடன்தான் நடத்தப்பட்டது. காந்தி தலைமையிலான சுதந்திரப் போராட்ட இயக்கம் ஒரு நாடகம்’’ என குறிப்பிட்டார்.

இதுகுறித்து, காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஆனந்த் சர்மா அளித்த பேட்டியில், ‘‘தேசிய இயக்கத்தை பா.ஜ.வினர் இழிவுப்படுத்துகின்றனர். பிரதமரும், பா.ஜ அரசும், காந்தியின் 150வது பிறந்த ஆண்டை கொண்டாடுவதில் உண்மையாக இருந்தால், பிரதமர் நாடாளுமன்றத்தில் ஹெக்டேயின் கருத்து பற்றி தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும். பாஜ.வினர் நம்பிக்கை இழந்த நிலையில் உள்ளனர். இந்தியாவின் ஆன்மா மீது அவர்கள் காயத்தை ஏற்படுத்தி வருகின்றனர்’’ என்றார்.
மற்றொரு செய்தித் தொடர்பாளர் ஜெய்வீர் ஷெர்கில் கூறுகையில், ‘‘ஹெக்டேயை பாஜ.வில் இருந்து நீக்க வேண்டும். தனது விசுவாசம் கோட்சேவுக்கா அல்லது காந்திக்கா என்பதை பிரதமர் நிருபிக்க வேண்டும். ஹெக்டேயின் கருத்துக்கு மோடி மன்னிப்பு கேட்க வேண்டும். ஹெக்டே மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்ய வேண்டும்’’ என்றார்.



Tags : Modi ,Gandhi ,BJP ,campaign Treason , Controversy, Gandhi,BJP MP,Minister Modi ,apology
× RELATED மனித பிறவியே இல்லை என்பதா?...