×

வேடசந்தூர் அருகே 6 வயது சிறுமி கொல்லப்பட்ட விவகாரம்: சிறுவர்கள் உள்பட 3 பேரை கைது செய்தது காவல்துறை!

திண்டுக்கல்: வேடசந்தூர் அருகே 6 வயது சிறுமி கொலை வழக்கில் சிறுவர்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகில் உள்ள ரங்கநாதபுரத்தை சேர்ந்த, நாகேந்திரன்-பாண்டீஸ்வரி தம்பதியினர் இருவரும் அருகில் உள்ள நூற்பாலையில் வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி ஒரு மகனும், 6 வயதில் ஒரு மகளும் உள்ளனர். அவர்களின் மகள் அதே பகுதியில் உள்ள பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகின்றார். இந்நிலையில் நேற்று ஞாயிற்றுகிழமை என்பதால், சிறுமி வீட்டிற்கு வெளியே விளையாடி கொண்டிருந்தாள். அப்பொழுது திடீரென்று சிறுமி மாயமான நிலையில் உறவினர்கள் ஊர் முழுவதும் சிறுமியை தேடியுள்ளனர்.

சிறுமியை எங்கு தேடியும் கிடைக்காத நிலையில் அதே பகுதியில் இருந்த உமாசங்கர் என்பவரின் தோட்டத்தில் உடல் முழுவதும் பலத்த காயங்களுடன் டிராக்டர் வாகனத்தின் சக்கரத்தின் அடியில் சிறுமியிம் உடல் கிடந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் கூம்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சிறுமியின் உடலை மீட்டு வழக்குப்பதிவு செய்து உடற்கூறாய்வுக்காக திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் நேற்று இரவு விசாரணைக்காக இறந்த சிறுமியின் பெற்றோர்களை அழைத்துச் சென்ற போலீசார், குழந்தை விபத்தில் உயிரிழந்ததாக கூறி வற்புறுத்தி வழக்குப்பதிவு செய்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டினர்.

பின்னர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனக்கூறி உறவினர்கள் அரசு தலைமை மருத்தவமனை எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் கொலைக்கு காரணமானவர்களை கைது செய்யும் வரையில் சிறுமியின் உடலை வாங்க மாட்டோம் என சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் ஒரு மணிநேரம் திருச்சி-திண்டுக்கல் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து போலீசார் குற்றவாளிகளை கைது செய்து உரிய தண்டனை பெற்று தருவதாக உறுதியளித்ததை அடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது. இந்த நிலையில், சிறுமி கொலை தொடர்பாக 2 சிறுவர்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சிக்கிய 2 சிறுவர்களும் சகோதரர்கள் என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.


Tags : persons ,children ,killing ,Vedasandur , Dindigul, Vedasandur, girl, killed, detained
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...