பெங்களூரு : நித்தியானந்தாவின் ஜாமீனை ரத்து செய்யக் கோரிய வழக்கில் வரும் 5ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று கர்நாடக உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நித்தியானந்தா ஆன்மீகச் சுற்றுப்பயணத்தில் உள்ளதாக சம்மன் கொடுக்கச் சென்ற விசாரணை அதிகாரி நீதிமன்றத்தில் தகவல் அளித்தார்.
வழக்கின் பின்னணி
*நித்தியானந்தா மீது கொலை, கொலை முயற்சி, பாலியல் பலாத்காரம் உள்பட பல வழக்குகள் பிடதி போலீஸ் நிலையத்தில் பதிவு செய்துள்ளதுடன் ராம்நகர் நீதிமன்றத்திலும் விசாரணை நடந்து வருகிறது.
*நித்யானந்தா ஆசிரமத்தில் சீடர்களாக இருந்த லெனின் கருப்பன், ஆர்த்திராவ் ஆகியோர் கொடுத்துள்ள புகாரின் பேரில் நித்யானந்தாவை பிடதி போலீசார் கடந்த 2010 ஏப்ரல் 11ம் தேதி கைது செய்தனர்.
*53 நாள் சிறையில் இருந்த பிறகு அவருக்கு 2010 ஜூன் 11ம் தேதி கர்நாடக ஐகோர்ட் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
*இந்நிலையில், லெனின் கருப்பன் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த சிறப்பு மனு நீதிபதி குன்ஹா அமர்வு முன்பு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, விசாரணை அதிகாரியை அழைத்த நீதிபதி, நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவை நித்யானந்தாவை நேரில் சந்தித்து வழங்க வேண்டும். மேலும், இவ்வழக்கு தொடர்பான முழு விசாரணை அறிக்கையை வரும் பிப்ரவரி 3ம் தேதி பிற்பகல் 2.30 மணிக்குள் நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும்,’’ என்று உத்தரவிட்டார்.
5ம் தேதி தீர்ப்பு
இந்நிலையில் இந்த வழக்கின் இன்றைய விசாரணையில், ஆசிரமித்துக்கு சென்ற தன்னிடம் நித்தியானந்தா ஆன்மீக சுற்றுலா சென்றுள்ளதால் அவரால் ஆஜராக முடியாது என்று ஊழியர்கள் தெரிவித்ததாக விசாரணை அதிகாரி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தார். மேலும் அந்த அறிக்கையில் நித்தியானந்தா பீடதி ஆசிரமித்ததில் இல்லை என்றும் விசாரணை அதிகாரி குறிப்பிட்டு இருந்தார்.
இதனிடையே ஆசிரமிடத்தில் இருக்கும் நித்தியானந்தா உதவியாளர் குமாரி அர்ச்சானந்தா, நீதிமன்றத்தில் ஒரு வாக்குமூலத்தை முன்வைத்தார். அதில் நித்தியானந்தா இருக்கும் இடம் தனக்கு தெரியாது, ஆதலால் நோட்டீஸை நிதியானந்தாவிடம் தர இயலாது என்று கூறியும் விசாரணை அதிகாரி, தன்னை சம்மன் நோட்டீஸை வாங்கிக் கொள்ளுமாறு வற்புறுத்தியதாக கூறினார்.
இதை கேட்ட நீதிபதி, விசாரணை அதிகாரிக்கு கடும் கண்டனத்தை தெரிவித்தார். அத்துடன் நீங்கள் நீதிமன்ற சம்மன் அனுப்புவது இது முதல் தடவையா? இது சேவையை செயல்படுத்துவதாகவும் நீதிமன்றத்தின் உத்தரவுகளுக்கு இணங்குவதாகவும் நீங்கள் எப்படிக் கூறுகிறீர்கள்? நீங்கள் அவர்களை நீதிமன்றத்திற்கு வரும்படி கட்டாயப்படுத்தியிருக்கிறீர்கள் என்று தானே அர்த்தம்.இவ்வாறு ஏன் நீங்கள் விளையாடுகிறீர்கள் என்று விசாரணை அதிகாரியிடம் நீதிபதி சரமாரி கேள்வி எழுப்பினார்.
இதற்கு விசாரணை அதிகாரி உடனடியாக மன்னிப்பு கேட்டுள்ளார். இருப்பினும், டி.எஸ்.பி.யின் நடத்தை குறித்து தகுந்த உத்தரவுகளை பிறப்பிப்பதாக நீதிபதி தெரிவித்தார். இதையடுத்து நித்தியானந்தாவின் ஜாமீனை ரத்து செய்யக் கோரிய வழக்கில் வரும் 5ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று கர்நாடக உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது