×

ராஜபாளையம் பகுதியில் விளைச்சல் இருந்தும் நெல்லுக்கு விலையில்லை: விவசாயிகள் கவலை

ராஜபாளையம்: ராஜபாளையம் பகுதியில் விளைச்சல் இருந்தும் நெல்லுக்கு விலை கிடைக்காமல் விவசாயிகள் கவலையில் உள்ளனர். தானியங்களை சேமித்து வைக்க கிடங்கு வசதி இல்லாமல், ஊர்தோறும் உலர்களம் இல்லாமலும் அவதிப்படுகின்றனர். ராஜபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் பெய்த தொடர் மழையால், விவசாயிகள் கரும்பு, சோளம், பயறு வகைகளை விளைநிலங்களில் பயிரிட்டனர். தற்போது நெல் உள்ளிட்ட விளை பொருட்களை அறுவடை செய்யும் நிலையில், அவைகளுக்கு ஏற்ற விலை கிடைக்காமல் விவசாயிகள் வேதனையில் உள்ளனர். மேலும், விளை பொருட்களை சேமித்து வைக்க போதிய குடோன் வசதியும் இல்லை.

இதனால், குறைந்த விலைக்கு விளைபொருட்களை விற்கும் அவல நிலையில் உள்ளனர். மேலும், கிராமங்கள் தோறும் உலர்களங்கள் இல்லாத நிலையில், சாலைகளில் தானியங்களை உலர்த்தி தரம் பிரிக்கின்றனர். இதனால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. விவசாய இடுபொருட்களை குறைந்த விலையில் வழங்கவும், விளை பொருட்களை பாதுகாத்து வைக்க கிடங்குகளை அமைக்கவும், ராஜபாளையம் பகுதி விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. இதனால், விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

Tags : area ,Rajapalayam ,Paddy , Rajapalayam, Paddy, Priceless
× RELATED ராஜபாளையத்தில் திமுக வேட்பாளர் தீவிர...