×

முசிறி அருகே குருவம்பட்டி பகுதியில் பண்டைய தமிழர்கள் வாழ்ந்த தொல்லியல் தடயங்கள் கண்டுபிடிப்பு: கள ஆய்வு மேற்கொள்ள அரசுக்கு மக்கள் கோரிக்கை

முசிறி: முசிறி அருகே குருவம்பட்டி பகுதியில் பண்டைய தமிழர்கள் வாழ்ந்த தொல்லியல், தொன்மை சான்றுகளை தொல்லியல் மற்றும் கல்வெட்டு ஆய்வாளர் பாபு என்பவர் கண்டறிந்துள்ளார். இந்த இடத்தை தமிழக அரசு கள ஆய்வு செய்து தொன்மை படிவங்களை வெளியுலகிற்கு கொண்டுவர வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உலக வரலாற்றில் தமிழகத்திற்கு தனியிடம் உண்டு. முற்காலத்தில் நம் தமிழ் மன்னர்களும், மக்களும் பல நாடுகளில் கடல்கடந்தும் தடம் பதித்துள்ளனர். கம்போடியா, ஜாவா, கடாரம், இலங்கை போன்ற நாடுகளுக்கும் கடல் கடந்து வணிகம் செய்து தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். மேலும் தமிழர்கள் கடல் வணிகத்திற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்துள்ளனர் என்ற செய்தி அயல்நாட்டார் குறிப்புகளிலிருந்து சான்றுகளில் இருந்தும் அறிய முடிகிறது. இதுவரை தமிழகத்தில் கொடுமணல், அழகன்குளம், ஆதிச்சநல்லூர், கீழடி உள்ளிட்ட இடங்களில் கிடைத்துள்ள அகழ்வாய்வு மூலம் தொன்மை சான்றுகளும் தமிழர்களின் நாகரிகமும் கண்டறியப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அந்த வரிசையில் திருச்சி மாவட்டம், முசிறி அருகே உள்ள குருவம்பட்டி கிராமத்தில் கள ஆய்வு மேற்கொண்ட தொல்லியல் ஆய்வாளர் பாபு என்பவர் புராதான கலை சின்னங்களையும் சான்றுகளையும் கண்டறிந்துள்ளார். இது குறித்து கல்வெட்டு ஆய்வாளர் பாபு கூறும்போது, திருச்சி மாவட்டம், குருவம்பட்டி கிராமம் காவிரியாற்றின் வடகரையில் அமைந்துள்ளது. பல வரலாற்று சின்னங்களை இவ்வூரில் பல இடங்களிலும் காண முடிகிறது. இந்த ஊரின் கிழக்கே பழமை வாய்ந்த சோழர்கால சிவலிங்கம் சோழர்கால நீர்ப்பாசன அடைவு தூண் மற்றும் பழமையான கிணறு, பழமையான ஐயனார் சிலை போன்றவை காணப்படுகிறது. இவைகள் இவ்வூருக்கு சிறப்பு செய்யும் தொல்லியல் சான்றுகள் ஆகும். தற்போது இவ்வூரில் உள்ள சிவன் கோயிலின் சுற்றுப்புறத்தில் உள்ள முட்புதர்கள் நிறைந்த பகுதியில் மேற்பரப்பு ஆய்வு நடத்தப்பட்ட போது பல தொல்லியல் தடயங்கள் கிடைத்துள்ளன.

அவை இங்கு முற்காலத்தில் பழமையான தமிழர் நாகரீகம் இருந்துள்ளதை உறுதிப்படுத்தும் விதமாக உள்ளது. இங்கு முற்காலத்தில் வாழ்ந்த மக்கள் பயன்படுத்திய கருப்பு, சிவப்பு மண் பாண்டங்களின் உடைந்த பாகங்கள் மற்றும் பழங்காலத்தில் பெண்கள் அணிந்த யானை தந்தத்தால் செய்யப்பட்ட வளையல்கள், சங்கு வளையல்கள், பவளமணி, வெண்ணிற பவளம், போன்றவைகளும் கிடைத்துள்ளன. மேலும் முற்கால மக்கள் உடை நெய்வதற்கு பயன்படுத்திய நூல் கோர்க்கும் மணிகள் போன்றவையும் கிடைத்துள்ளது. எனவே இங்கு வாழ்ந்த மக்கள் நெசவுத் தொழில் செய்து வந்துள்ளனர் என்பதையும், இதன் மூலம் அறிய முடிகிறது. இங்கு கண்டறியப்படும் இரும்பு கழிவுகள் இங்கு முற்காலத்தில் இரும்பு உருக்காலை இருந்திருக்கலாம் என்பதையும் எடுத்துக்காட்டும் விதமாக உள்ளது. இங்கு வாழ்ந்த மக்கள் பயன்படுத்திய பல்வகையான மண் பானைகள் மற்றும் கிண்டி எனப்படும் நீர் குடுவையின் உடைந்த பாகங்களும் கிடைத்துள்ளன.

மற்றும் மனித உருவம் புடைப்புச் சிற்பமாக செய்யப்பட்ட மண்பாண்டத்தின் சிதைந்த பாகம் கிடைத்துள்ளது. இங்கு வாழ்ந்த மக்கள் மண்பாண்ட தொழிலை கலைநயத்தோடு செய்யும் தொழில்நுட்பம் தெரிந்தவர்களாக இருந்துள்ளனர். மேலும் கிடைத்துள்ள நாடுகள் சிலவற்றில் தமிழ் பிராமி எழுத்துக்களும் கிடைத்துள்ளன. கருப்பு சிவப்பு பானை ஓட்டில் ஓவியக் குறியீடு தராசு உருவமும் வரையப்பட்டுள்ளது. சில பானை ஓடுகள் மிகவும் வழவழப்பாகவும் மெல்லியதாகவும் செய்யப்பட்டுள்ளது. இப்பகுதியில் பெருமளவில் எங்கும் பணிகள் அதிக அளவில் உடைந்து பரவிக்கிடக்கின்றன. முற்காலத்தில் மக்கள் நதிக் கரையிலேயே தமது வாழ்விடங்களை அமைத்து வாழ்ந்துள்ளனர். குருவம்பட்டி பண்டைய சோழ நாட்டில் காவிரி ஆற்றின் வடகரையில் உள்ளது. நதிக்கரைகளில் நாகரிகங்கள் பெருமளவு வளர்ந்து உள்ளதை உறுதி செய்யும் சான்றாக தமிழகத்தில் இதுவரை கிடைத்துள்ள தொல்லியல் சான்றுகள் உள்ளன.

இங்கு கிடைத்துள்ள கருப்பு சிவப்பு மண்பாண்ட ஓடுகள் அறிக்கையின் வகை ரோமானிய மண்பாண்டங்கள் ஓடு ஒப்பிடக்கூடிய வகையில் இருப்பதால் முற்காலத்தில் இங்கு வாழ்ந்த மக்கள் ரோமானியர்கள் ஓடு எவனர்கள் வணிக தொடர்பு கொண்டு இருந்திருக்கலாம் என்பதற்கு சான்றாக உள்ளன.
கிடைத்துள்ள சான்றுகளின்படி இவ்வூர் முற்காலத்தில் நகர நாகரிகமாக மக்கள் வாழ்ந்திருக்கலாம். மிகப்பெரிய அளவில் தொழில் கூடங்களும் முறையாக கட்டமைக்கப்பட்ட வீடுகளும் இருந்திருக்கலாம் என்பதை இவ்வூரின் பள்ளி அருகே பூமிக்கடியில் புதைந்து கிடக்கும் நெடிய பெரிய அளவிலான செங்கல் கட்டுமான அமைப்பு கொண்ட சுவர் தெரியப்படுத்துவதாக உள்ளது. தமிழகத்தோடு கிரேக்கர்களும் ரோமானியர்களும் கடல்வழி வணிகம் செய்து அங்கிருந்து போன்றவற்றை கொடுத்து இங்கிருந்து மிளகு தந்தம் போன்றவற்றை பண்டமாற்றாக வாங்கிச் சென்றதை சங்க நூல்கள் சான்றாக கூறுகின்றன.

திருச்சி மாவட்டத்திலுள்ள உறையூர் சிறந்த ஆடை நெசவு தொழில் உற்பத்தி மையமாக இருந்துள்ளதாக வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன. நம் தமிழகத்தின் புதுக்கோட்டை, கரூர், உறையூர் போன்ற இடங்களில் பண்டைய ரோமானிய நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டது. தமிழர்களின் அயல்நாட்டு வணிகத் தொடர்பை உறுதி செய்வதாக இது அமைந்துள்ளது. நம் தமிழகத்தில் என்று எத்தனையோ தொன்மை சிறப்பு மிக்க இடங்கள் கண்டறியப்பட்டு முறையாக ஆய்வு மேற்கொள்ளப்படாமல் மண் மேடாக காணப்படுகின்றன. தற்போது கண்டறியப்பட்டுள்ள குருவம்பட்டி தமிழக அரசு உரிய கள ஆய்வு மேற்கொண்டால் பண்டைய தமிழர் நாகரிகம் இதுபோன்று இப்பகுதியிலும் காவிரி ஆற்று நாகரீகமாக இருந்துள்ளது என்பதை தெளிவாக்கும் என்று கல்வெட்டு ஆய்வாளர் பாபு தெரிவித்துள்ளார்.

* இங்கு கண்டறியப்படும் இரும்பு கழிவுகள் இங்கு முற்காலத்தில் இரும்பு உருக்காலை இருந்திருக்கலாம் என்பதையும் எடுத்துக்காட்டும் விதமாக உள்ளது.
* மனித உருவம் புடைப்புச் சிற்பமாக செய்யப்பட்ட மண்பாண்டத்தின் சிதைந்த பாகம் கிடைத்துள்ளது.
* தமிழர்களின் அயல்நாட்டு வணிகத் தொடர்பை உறுதி செய்வதாக இது அமைந்துள்ளது.
* திருச்சி மாவட்டத்திலுள்ள உறையூர் சிறந்த ஆடை நெசவு தொழில் உற்பத்தி மையமாக இருந்துள்ளதாக வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன.


Tags : area ,Tamils ,Kuruvampatti ,Musiri Musiri , Musiri, Archaeological traces of ancient Tamils
× RELATED தமிழர்கள் தலைநிமிர்ந்து வாழ ஒன்றியத்தில் ஆட்சி மாற்றம்