- பெண்கள்
- நீதிபதிகள்
- அமர்வு
- கேட்டு
- சபரிமலை
- உச்ச நீதிமன்றம்
- சபரிமலை ஐயப்பன் கோயில்
- நீதிபதிகள் அமர்வு
- பெண்கள் கோயில், உச்ச நீதிமன்றம்
புதுடெல்லி: சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பான தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று தொடங்குகிறது. கேரள மாநிலம் சபரிமலை கோயிலுக்கு அனைத்து வயதுப் பெண்களும் செல்லலாம் என்று கடந்த 2018 செப்டம்பர் 28ம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனை மறு ஆய்வு செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் 65 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இதனை விசாரித்த 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, 7 நீதிபதிகள் அமர்வுக்கு வழக்கை மாற்றி கடந்த ஆண்டு நவ. 14ம் தேதி தீர்ப்பு வழங்கியது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் 60-க்கும் மேற்பட்ட சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. கடந்த மாதம் இதனை பரிசீலித்த உச்சநீதிமன்றம் 9 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டது.
இதன்படி தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள் பானுமதி, அசோக்பூஷன், நாகேஸ்வர ராவ், சந்தான கவுடர், எஸ்.ஏ.நசீர், கவாய், சுபாஷ் ரெட்டி, சூரியகாந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று சீராய்வு மனுக்களை விசாரணை செய்கிறது. இந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர்கள் எழுப்புயுள்ள கேள்விகளை கருத்தில் கொண்டு 10 நாட்கள் விசாரணை நடைபெறுகிறது. மசூதியில் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்படுவது, பார்சி இன பெண்கள் வேறு இனத்தை சேர்ந்த ஆண்களை திருமணம் செய்தால் பார்சி வழிப்பாட்டு தலத்தில் அனுமதி மறுக்கப்படுவது உள்ளிட்ட வழக்குகளையும் இந்த அமர்வு விசாரிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.