லக்னோ: குடும்பத் தகராறில் மனைவியை குத்திக்கொன்று, தலையை துண்டித்து கையில் எடுத்துக் கொண்டு ஒரு நபர் ஊர்வலமாக போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றார். போலீசாரிடம், பாரத் மாதா கீ கோஷம் போட்டு திணற வைத்தார்.
உத்தர பிரதேசம் மாநிலம் பஹதூர்பூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் அகிலேஷ் ராவத் (30). இவரது மனைவி ரஜனி (25). இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்து, 2 ஆண்டுக்கு முன்பு இறந்துவிட்டது. முரடராக இருந்த அகிலேஷ், அடிக்கடி மனைவியிடம் சண்டை போடுவாராம். இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை தம்பதியர் இடையே வழக்கம்போல் சண்டை நடந்துள்ளது. ஒருகட்டத்தில் கோபத்தின் உச்சிக்கு சென்ற அகிலேஷ், மனைவியை போட்டு சரமாரியாக அடித்து துவைத்துள்ளார். மேலும், வீட்டில் இருந்த கத்தியை எடுத்து ரஜனியை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
எனினும், ஆத்திரம் அடங்காத அகிலேஷ், ரஜனியின் தலையை தனியாக துண்டித்து, கையில் எடுத்துக் கொண்டு போலீஸ் ஸ்டேஷனை நோக்கி நடந்துள்ளார். இதில் குறிப்பிட வேண்டிய விஷயம். தம்பதியரின் சண்டை, கத்தியால் அகிலேஷ் குத்தியது, இவையனைத்தையும் அக்கம்பக்கத்தினர் வேடிக்கை மட்டுமே பார்த்துள்ளனர். மனைவியின் தலையை தனியாக துண்டித்து அகிலேஷ் எடுத்து வருவதை பார்த்ததும் அவர்கள் வீடுகளில் புகுந்து கொண்டு கதவை சாத்திக் கொண்டுள்ளனர்.சுமார் ஒன்றரை கிமீ. தூரம் வரை மனைவியுடன் தலையுடன் அகிலேஷ் நடந்து சென்று போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றார். அகிலேஷ் தலையுடன் வரும் செய்தியை யாரோ போனில் போலீசாருக்கு தெரிவித்துள்ளனர். அவர்கள் விரைந்து வந்து வழியிலேயே அவரை மடக்கினர். போலீசாரை பார்த்த அகிலேஷ், அட்டேஷனில் நின்றுக் கொண்டு, ‘ஜன கன மன...’ என்று தேசிய கீதத்தை பாட ஆரம்பித்துவிட்டார். பின்னர் ‘பாரத் மாதா கீ ஜே’ என்று கோஷம் போட்டு, மனைவியின் தலையை போலீசாரிடம் கொடுத்தார். பின்னர் அவரை போலீசார் கைது செய்தனர்.