திருவொற்றியூர்: எண்ணூர், பசும்பொன் நகரை சேர்ந்தவர் கருப்பையா (50). தனியார் கம்பெனி ஊழியர். இவரது மனைவி மகாலட்சுமி (45). கடந்த இரு தினங்களுக்கு முன் இரவு அப்பகுதியில் உள்ள கோயிலில் சிறப்பு அபிஷேகம் நடந்தது. சாமி தரிசனம் செய்வதற்காக மகாலட்சுமியும், அவரது ஒன்றரை வயது பேரக்குழந்தை ரித்திவிக்கும் கோயிலுக்கு சென்றனர். அபிஷேகம் நடந்தபோது பக்தர்கள் கண்களை மூடியபடி தரிசனம் செய்தனர். அப்போது கோயிலுக்குள் நைசாக புகுந்த 2 மர்ம ஆசாமிகள், தரிசனம் செய்வதுபோல் மகாலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த 3 சவரன் தாலி செயினை பறிக்க முயன்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மகாலட்சுமி ஒரு கையில் பேரக்குழந்தையையும், மற்றொரு கையில் தாலி செயினையும் விடாமலும் பிடித்து கொண்டு கூச்சலிட்டார்.
அதற்குள் தாலி செயினை அறுத்துக்கொண்டு மர்ம நபர்கள் தப்பினர். கோயிலுக்கு வந்த பக்தர்கள் ஆசாமிகளை விரட்டிச்சென்றனர். ஆனால் அவர்கள் தயாராக நிறுத்தி வைத்திருந்த பைக்கில் ஏறி தப்பினர். தாலி செயினை பிடித்து இழுத்தபோது மகாலட்சுமிக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டது.புகாரின்பேரில் எண்ணூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.