அண்ணாநகர்: போன் செய்தால் புதிய கழிவுநீர் இணைப்பு வழங்கும் திட்டத்தின் மூலம் புதிதாக 400 புதிய இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன என குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னை நகரில் தனியார் குடியிருப்புகளுக்கு எளிய முறையில் கழிவுநீர் இணைப்பு பெறும் வகையில், ‘அழைத்தால் இணைப்பு’ மற்றும் ‘இல்லந்தோறும் இணைப்பு’’ எனும் 2 புதிய திட்டங்களை கடந்த மாதம் சென்னை பெருநகர குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் அறிமுகப்படுத்தியது.இத்திட்டத்தின்படி புதிய கழிவுநீர் இணைப்பு பெறுவதற்கு பயனாளிகள் எவ்வித ஆவணங்களையும் சமர்ப்பிக்க தேவையில்லை. அவற்றை இணைப்பு வழங்கிய பிறகு சமர்ப்பித்தால் போதும். மேலும், இந்த இணைப்பு கட்டணத்தை தவணை முறையிலும் செலுத்தலாம் என குடிநீர் வாரியம் குறிப்பிட்டு இருந்தது. இதனால் இலவச கழிவுநீர் இணைப்பை பெறுவதற்கு மக்கள் பெரிதும் ஆர்வம் காட்டினர்.
இந்நிலையில் சென்னை மாநகராட்சி, மண்டலம் 7, அண்ணாநகர் பகுதிக்கு உட்பட்ட 15 வார்டுகளில் தற்போது 400க்கும் மேற்பட்ட புதிய கழிவுநீர் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. இத்திட்டம் வெற்றி பெற்றதை தொடர்ந்து இதேபோல் புதிய குடிநீர் இணைப்பு திட்டத்தையும் அறிமுகப்படுத்த திட்டமிட்டிருக்கிறோம் என குடிநீர்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.