×

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும்: சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

சென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் காய்ச்சல் பரவுவதை தடுப்பதற்காக கீழ்க்கண்ட முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு  வருகின்றது. பொதுமக்களும் தடுப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: கொரோனா வைரஸ் என்பது மனிதர்களுக்கு சளி, இருமல், காய்ச்சல், உடல் சோர்வு மற்றும் மூச்சுத் திணறல் ஆகியவற்றை ஏற்படுத்தக் கூடிய ஒருவகை வைரஸ் விலங்குகளிலிருந்து மனிதர்களுக்கு பரவி இருக்கலாம் என நம்பப்படுகிறது.  இந்நோய் அறிகுறிகள் கண்ட நபர்கள் இருமும்போதும், தும்மும்போதும் வெளிப்படும் நீர்த்திவலைகள் மூலம் நேரடியாகவும், நீர்த்திவலைகள் படிந்துள்ள பொருட்களை தொடும்பொழுது கைகள் மூலமாகவும் பரவ வாய்ப்புள்ளது.

மத்திய அரசின் தேசிய நோய் கண்காணிப்பு நிலையத்திலிருந்து (நேஷனல் சென்டர் பார் டிசீஸ் கன்ட்ரோல்) பெறப்பட்ட எச்சரிக்கை தகவலை அடுத்து தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு, மாநில மற்றும் மாவட்ட  அளவிலான தொற்றுநோய் தடுப்பு விரைவு குழுக்கள் (ரேபிட் ரெஸ்பான்ஸ் டீம்) தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் காய்ச்சல் தடுப்பு நெறிமுறைகள் அனைத்து மாவட்டங்களுக்கும் பகிரப்பட்டு அவற்றை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக சுகாதாரத்துறை செயலாளர் கொரோனா வைரஸ் காய்ச்சல் கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை தினமும் மாநில மற்றும் மாவட்ட அளவிலான உயர் அலுவலர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா வைரஸ் காய்ச்சல் அறிகுறிகள் உள்ளதா என்பதை தெர்மல் ஸ்கேனர் மூலம் கண்டறியப்படுகிறது. மருத்துவக் குழுவினர் பரிசோதனை மூலமும் கண்காணித்து வருகின்றனர்.  விமான நிலையங்களில் சுகாதார துறையின் கூடுதல் இயக்குனர் மற்றும் இணை இயக்குனர்கள் தலைமையிலான மருத்துவக் குழுவினர் சூழ்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். 31.01.2020 வரை சீனாவில் இருந்து தமிழகத்திற்கு வந்த 394 பயணிகளுக்கும் கொரோனா வைரஸ் காய்ச்சல் அறிகுறிகள் இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டு அனைவரும் பொது சுகாதார துறையின் தொடர் கண்காணிப்பில் உள்ளனர்.  அவர்கள் தொடர்ந்து 28 நாட்கள் கண்காணிக்கப்படுவார்கள்.
சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி ஆகிய அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் காய்ச்சல் சிகிச்சைக்காக தனி பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.  

மேலும், மேற்கூறிய 4 விமான நிலையங்களிலும் கொரோனா வைரஸ் காய்ச்சல் அறிகுறிகள் உள்ளவர்களை கண்டறிந்தால் அவர்களை உடனடியாக சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல ஏதுவாக சிறப்பு அவசர ஊர்தி மற்றும் சுய பாதுகாப்பு உபகரணங்கள் (பெர்சனல் புரடெக்டிங் எக்யூப்மன்ட்) அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.  சுயபாதுகாப்பு உபகரணங்கள், என்95 பாதுகாப்பு முக கவசங்கள் மற்றும் மூன்று அடுக்கு முககவசங்கள் ஆகியவை போதிய அளவில் இருப்பில் வைக்கப்பட்டுள்ளன. அரசு மருத்துவமனைகளில் தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், கொரோனா வைரஸ் காய்ச்சல் குறித்த மருத்துவ உதவி மற்றும் ஆலோசனைகளுக்கு பொது சுகாதாரத் துறை இயக்குநரகத்தில் செயல்படும் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறையை (24 மணி நேர கன்டிரோல் ரூம்) தொலைபேசி எண்கள் - 044-29510400, 044-29510500 மற்றும் கைபேசி எண்  94443 40496, 87544 48477 மூலம் தொடர்பு கொள்ளலாம். மேலும் 104 சேவை மையத்தினையும் தொடர்பு கொள்ளலாம். கொரோனா வைரஸ் காய்ச்சல் அறிகுறிகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு பிரசுரங்கள் பொது சுகாதாரத் துறை மூலமாக சமூக வலைதளங்கள் மூலமாக பொதுமக்களுக்கு பகிரப்பட்டு வருகிறது. இவ்வாறு தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய நடவடிக்கைகள்
* அடிக்கடி கைகளை சோப்பு போட்டு நன்கு தேய்த்து கழுவ வேண்டும். ஒவ்வொரு முறையும் கை கழுவ குறைந்தபட்சம் 30 விநாடிகள் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* கொரோனா வைரஸ் காய்ச்சல் பாதிக்கப்பட்டுள்ள சீனாவின் பகுதிகளுக்கு பயணம் செல்வதை தவிர்க்கலாம்.
* வைரஸ் பாதிப்பு தாக்குவதற்கு வாய்ப்புள்ளதால் 3 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள், 70 வயதிற்கு மேற்பட்டவர்கள் பொது இடங்கள், கூட்ட நெரிசல் உள்ள இடங்களுக்கு செல்லுவதை தவிர்க்க வேண்டும்.
* அசைவ உணவு உண்பவர்கள், அதை நன்கு வேகவைத்த பின்னர் சாப்பிட வேண்டும்.
* இருமும் போதும் தும்மும்போதும் முகத்தை கர்சீப்பால் மூடி கொள்ள வேண்டும்.

Tags : Coronavirus Virus, Prevention, Health Department
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...