சென்னை: உளுந்தூர்பேட்டை அருகில் ஏழுமலையான் கோயில் கட்டப்படும் என்று திருப்பதியில் சாமி தரிசனம் செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி நேற்று தனது குடும்பத்துடன் திருமலை ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு தேவஸ்தானம் சார்பில் பூரண கும்ப மரியாதையும், தீர்த்த பிரசாதங்கள், நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. அவரை தமிழக திருப்பதி தேவஸ்தான கோயில்களின் தலைவர் சேகர்ரெட்டி வரவேற்றார். பின்னர் எடப்பாடி பழனிச்சாமி, பெரிய ஜீயரிடம் ஆசி பெற்றார்.
சாமி தரிசனத்திற்கு பிறகு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழ்நாட்டில் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் பேட்டை தேசிய நெடுஞ்சாலை பாலம் அருகில் திருப்பதி வெங்கடாஜலபதி திருக்கோயில் கட்டுவதற்காக தேவஸ்தானம் போர்டுக்கு, ஐந்தரை ஏக்கர் நிலம் பத்திரப் பதிவு செய்து ஒப்படைத்திருக்கிறோம். திருப்பதி தேவஸ்தானத்தால் அங்கு மிகப்பெரிய ஏழுமலையான் திருக்கோயில் கட்டப்பட இருக்கிறது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.