சென்னை: பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 89 அணைகளை பராமரிக்க மெக்கானிக்கல் இன்ஜினியர்கள் நியமிக்க நடவடிக்ைக எடுக்க வேண்டும் என்று அணைகள் பாதுகாப்பு இயக்ககம் சார்பில் தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது. தமிழக பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 14,098 ஏரிகள், 89 அணைகள் உள்ளது. இதில், 89 அணைகளை மட்டும் கண்காணிக்க அணைகள் பாதுகாப்பு இயக்ககம் என்கிற பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இயக்கத்தின் தலைமை பொறியாளர் ராஜேந்திரன் அனைத்து மண்டல தலைமை பொறியாளர்களுக்கும் கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியுள்ளார். அதில், ‘அணைகளில் எந்த பணி செய்தாலும் அணைகள் பாதுகாப்பு இயக்ககத்திடம் தகவல் தெரிவிக்க வேண்டும்’ என்று அந்த கடிதத்தில் கூறியுள்ளார். இந்த நிலையில் அணைகளில் பராமரிப்பு பணி மேற்கொள்ள ஏதுவாக மெக்கானிக்கல் இன்ஜினியர், சிவில் இன்ஜினியர், ஐடிஐ படித்த தொழில்நுட்ப அலுவலர்கள் கொண்ட குழுவினர் கட்டாயம் தேவைப்படுகின்றனர்.
தற்போதைய சூழ்நிலையில், இவர்கள் இல்லாத நிலையில் சிவில் இன்ஜினியர்களே இந்த பணியை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், பல நேரங்களில் மதகுகள் உடைந்து விடுகிறது. இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அணைகளில் பராமரிப்பு பணி மேற்கொள்ள ஏதுவாக பிஇ மற்றும் டிப்ளமோ மெக்கானிக்கல் இன்ஜினியர், ஐடிஐ படித்த தொழில்நுட்ப அலுவலர்களை நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்க அணைகள் பாதுகாப்பு இயக்ககம் சார்பில் கடிதம் எழுதியிருப்பதாக கூறப்படுகிறது. மேலும், அணைகள் பாதுகாப்பு இயக்கக பிரிவில் கூடுதல் சிவில் இன்ஜினியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீர்வளப்பிரிவு முதன்மை தலைமை பொறியாளர் ராமமூர்த்திக்கு கடிதம் எழுதியிருப்பதாக பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.