×

சொந்த வீட்டை விற்றதால் விரக்தி விஷம் கொடுத்து உறவினர் கொலை தம்பதி தூக்கிட்டு தற்கொலை: வியாசர்பாடியில் சோகம்

பெரம்பூர்: வியாசர்பாடி, இந்திராகாந்தி நகர், 2வது தெருவை சேர்ந்த மீன் வியாபாரி கரிகாலன் (46). இவரது மனைவி முனியம்மாள் (45). தம்பதியின் மகன் ஹரிகரன் (22), மகள் குணவதி (20). இவர்களுடன் முனியம்மாளின் அண்ணன் ஆறுமுகம் (50) வசித்து வந்தார். இவர், சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. கரிகாலன் தனது மகள் திருமணத்தின்போது, செலவுக்காக தனது வீட்டை அடமானம் வைத்து ரூ.7 லட்சம் வாங்கியுள்ளார். இந்த நிலையில், கடந்த 4 மாதத்துக்கு முன்பு கரிகாலனுக்கு திடீரென கை, கால்கள் செயலிழந்தது. இதனால் வேலைக்கு செல்ல முடியாமலும், கடன் பணத்தை திரும்ப கொடுக்க முடியாமலும் தவித்துள்ளார். இதனால், வீட்டை விற்று கடனை அடைக்க முடிவு செய்துள்ளார். இதற்கு மகன் ஹரிகரன் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், தந்தையுடன் கோபித்துக்கொண்டு, கடந்த 3 மாதத்துக்கு முன் வீட்டைவிட்டு வெளியேறி உள்ளார்.

இதன்பிறகு கரிகாலன் வீட்டை விற்று கடனை அடைத்துவிட்டு திருவல்லிக்கேணியில் வாடகை வீடு பார்த்து முன்பணம் கொடுத்துள்ளார். சொந்த வீட்டை விட்டு விட்டு வாடகை வீட்டுக்கு செல்ல இருந்ததால் கரிகாலன் உறவினர்கள்  யாருடனும் பேசாமல் மனஉளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை கரிகாலன் வீடு திறந்து கிடந்ததால் பக்கத்து வீட்டுக்காரர்கள் அங்கு சென்று பார்த்தபோது, முனியம்மாளின் அண்ணன் ஆறுமுகம் வாயில் நுரைதள்ளியபடி சடலமாக கிடந்துள்ளார். ஒரு அறையில் கரிகாலனும், மற்றொரு அறையில் முனியம்மாளும் மின்விசிறியில் தூக்கில் தொங்கியது தெரிந்தது. தகவலறிந்து எம்கேபி நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, 3 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

* இரவு முழுவதும் பேசிய தம்பதி
தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு கரிகாலனும், முனியம்மாளும் வீட்டின் வெளியே நேற்று முன்தினம் நள்ளிரவு 1.30 மணி வரை பேசியுள்ளனர். இதை பார்த்த பக்கத்து வீட்டு பெண், “ஏன் இன்னும் தூங்கவில்லை” என்று கேட்டுள்ளார். அப்போது அவர்கள், ‘‘தூக்கம் வரவில்லை’’ என்று கூறியதால், அந்த பெண் தூங்க சென்றுவிட்டார். நேற்று காலை 5 மணிக்கு வேலைக்கு சென்ற இளைஞர் ஒருவர் தம்பதி பேசிக்கொண்டிருப்பதை பார்த்துள்ளார். இதன்பிறகுதான் தற்கொலை செய்துள்ளனர். தாங்கள் இறந்த பிறகு மனநலம் பாதிக்கப்பட்ட அண்ணனை யாரும் கவனிக்க மாட்டார்கள் என்பதால் முன்னதாக அவருக்கும் விஷம் கொடுத்து கொன்றுள்ளனர்.

Tags : relatives ,home ,suicide , Poisoning, relative killing, couples, hanging, suicide
× RELATED நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சக...