ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் காவல்துறை சார்பில் பக்தர்கள் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள சாலையில் தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. பழநியில் வரும் பிப்.8ம் தேதி தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கவுள்ளது. இதையொட்டி பக்தர்கள் பாதுகாப்பான பாதயாத்திரை பயணம் மேற்கொள்ள பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக ஒட்டன்சத்திரம் செக்போஸ்டில் இருந்து பழநி சாலை கேஆர் அரசு மேல்நிலைப்பள்ளி வரை இடது ஓரமாக பக்தர்கள் செல்வதற்கு வசதியாக தடுப்பு கட்டைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இதன்மூலம் போக்குவரத்து நெரிசலில் இருந்து பக்தர்கள் பாதுகாப்பாக செல்ல முடியும் என்றும், விபத்துகளை தடுக்க முடியும் என்றும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்று ஒட்டன்சத்திரம் காவல்துறையினர் தெரிவித்தனர்.