புதுடெல்லி: நிர்பயா கொலை குற்றவாளி வினய் சர்மாவின் கருணை மனுவை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்துள்ளார். டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா கடந்த 2012ம் ஆண்டு பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். இந்த வழக்கில் முகேஷ் குமார் சிங், பவன் குமார் குப்தா, விஜய் குமார் சர்மா மற்றும் அக்சய் குமார் சிங் ஆகிய 4 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து மேற்கண்ட நான்கு குற்றவாளிகளுக்கும் இன்று காலை 6 மணிக்கு தண்டனையை நிறைவேற்ற உத்தரவிடப்பட்டு இருந்தது. தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் 4 குற்றவாளிகளும் மனு தாக்கல் செய்தனர்.
மேற்கண்ட மனு, டெல்லி பாட்டியாலா நீதிமன்ற நீதிபதி தர்மேந்தர் ராணா அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஏ.பி.சிங் வாதத்தில்,”குற்றவாளிகளில் ஒருவரான வினய் சர்மா ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பியுள்ளார். அதில் முடிவு தெரியும் வரை மற்றவர்களின் தண்டனையை நிறைவேற்ற முடியாது என வாதிட்டார்.
இதையடுத்து மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இர்பான் அகமது,மற்ற மூவருக்கும் பிப்ரவரி 1ம் தேதி (இன்று) தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என வாதிட்டார். வாதங்களை கேட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவில்,”நிர்பயா பாலியல் வழக்கு விவகாரத்தில் குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு தண்டனையை நிறைவேற்ற நீதிமன்றம் இடைக்கால தடை விதிக்கிறது. இது அடுத்த உத்தரவு வரும் வரை தொடரும். இது குறித்து உத்தரவு திகார் சிறைத்துறை நீதிமன்ற சட்ட விதிகளுக்கு உட்பட்டு அனுப்பி வைக்கப்படும் என தெரிவித்தார். இந்நிலையில் வினய் சர்மாவின் கருணை மனுவை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்து உத்தரவிட்டுள்ளார்.